கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடத்த அனைத்து பணிகளும் தயார் நிலையில் உள்ளது - மந்திரி சுரேஷ்குமார்


கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடத்த அனைத்து பணிகளும் தயார் நிலையில் உள்ளது - மந்திரி சுரேஷ்குமார்
x
தினத்தந்தி 6 July 2021 10:24 PM GMT (Updated: 6 July 2021 10:24 PM GMT)

கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை நடத்தும் பணிகள் தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்புக்கு மத்தியிலும் வருகிற 19 மற்றும் 22-ந் தேதிகளில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த தேர்வுக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் நேற்று காணொலி காட்சி மூலமாக பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் ஆலோசனை நடத்தினார்.

அதன் பின்னர் மந்திரி சுரேஷ்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

தேர்வில் பங்கேற்கும் ஆசிரியர்கள், ஊழியர்கள் என 95 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். மீதமுள்ள 5 சதவீதம் பேரும் தேர்வு தொடங்குவதற்கு முன் பாக தடுப்பூசி போட்டுக் கொள்வார்கள்.

கர்நாடகத்தில் தற்போது கொரோனா 2-வது அலை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மிகவும் குறைந்திருக்கிறது. தேர்வுக்கு இன்னும் சில நாட்கள் இருப்பதால், அதற்கு முன்பாக கொரோனா பாதிப்பு இன்னும் குறைய வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. சொந்த ஊர்களுக்கு சென்ற மாணவர்களுக்கு, அவர்கள் தற்போது இருக்கும் இடத்தில் இருந்தபடியே தேர்வு எழுத அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவ, மாணவிகள் அனைவரும் கண்டிப்பாக தேர்வை எழுத தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது மழை காலம் என்பதால் சிக்கமகளூரு, உடுப்பி, தட்சிண கன்னடா, குடகு, சிவமொக்கா உள்ளிட்ட மாவட்டங்களில் தேர்வை எழுதி விட்டு மாணவர்கள் மீண்டும் வீட்டுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டால், தேர்வு மையங்கள் அருகேயே தங்க வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனையில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வை எந்த பிரச்சினையும் இன்றி நடத்துவதற்கு தயாராக இருக்கும்படி அறிவுறுத்தி உள்ளேன். அதன்படி, மாநிலத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை நடத்த கல்வித்துறை முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருப்பதுடன், அனைத்து பணிகளும் தயார் நிலையில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story