பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு; சைக்கிளில் சட்டசபைக்கு வந்த மேற்கு வங்காள மந்திரி


பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு; சைக்கிளில் சட்டசபைக்கு வந்த மேற்கு வங்காள மந்திரி
x
தினத்தந்தி 8 July 2021 8:01 AM IST (Updated: 8 July 2021 8:01 AM IST)
t-max-icont-min-icon

மேற்கு வங்காள மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசில் தொழிலாளர் நலத்துறை மந்திரியாக இருப்பவர் பேச்சாராம் மன்னா.

சிங்கூர் தொகுதி எம்.எல்.ஏ.வான இவர், டாடா நானா கார் தொழிற்சாலைக்கு எதிராக நடத்திய போராட்டங்கள் மூலம் பிரபலமானவர். நாடு முழுவதும் பல இடங்களில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.100-ஐ தாண்டியுள்ள நிலையில், கொல்கத்தாவிலும் அது சதம் அடித்துள்ளது. இந்நிலையில், ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள தனது வீட்டிலிருந்து பேச்சாராம் மன்னா நேற்று சட்டசபைக்கு 38 கி.மீ. தூரம் சைக்கிள் ஓட்டி வந்தார். காலை 8 மணிக்கு தனது வீட்டிலிருந்து சில தொண்டர்கள் புடைசூழ புறப்பட்ட அவர், நண்பகல் 12.30 மணியளவில் சட்டசபை கட்டிடத்தை அடைந்தார். அங்கு நடப்பு கூட்டத்தொடரில் அவர் பங்கேற்றார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பேச்சாராம் மன்னா, ‘எரிபொருள்களின் கிடுகிடு விலை உயர்வு, நரேந்திர மோடி அரசின் சமீபத்திய தோல்வி ஆகும். பெட்ரோல் விலை கொல்கத்தாவில் ரூ.100-ஐ கடந்துள்ள நிலையில், நாங்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறோம்’ என்றார்.

Next Story