டெல்லியில் கனமழையால் போக்குவரத்து பாதிப்பு; ஊர்ந்து சென்ற வாகனங்கள்


டெல்லியில் கனமழையால் போக்குவரத்து பாதிப்பு; ஊர்ந்து சென்ற வாகனங்கள்
x
தினத்தந்தி 13 July 2021 7:25 AM GMT (Updated: 13 July 2021 7:25 AM GMT)

டெல்லியில் கனமழையால் வாகனங்கள் மெல்ல ஊர்ந்து சென்று பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


புதுடெல்லி,

டெல்லியில் கோடை கால தொடர்ச்சி, மழையின்மை மற்றும் கடும் வறட்சி ஆகியவற்றால் பல பகுதிகளிலும் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.  இதனை முன்னிட்டு பா.ஜ.க. தொண்டர்கள் அரசுக்கு தங்களது எதிர்ப்பினை தெரிவிக்கும் வகையில் நேற்று போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

அவர்களை போலீசார் தண்ணீர் பீய்ச்சியடித்து கலைய செய்தனர்.  நாட்டில் ராஜஸ்தான், உத்தர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.  எனினும் டெல்லியில் நேற்று காலை வரை மழை பொழிவு இல்லை.

எனினும், நண்பகலுக்கு பின்னர் மழை பெய்ய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது.  இதனால் மக்கள் ஆவலுடன் மழையை எதிர்பார்த்திருந்தனர்.

இந்த நிலையில், டெல்லியில் இன்று காலை ஷாஜகான் சாலை, அக்பர் சாலை, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் பருவமழை பெய்ய தொடங்கியது.  இதனால் சாலையில் வாகனங்கள் வெளிச்சத்திற்காக காலையில் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றன.

டெல்லியில் ஊரடங்க தளர்வுகளால் கார்கள், பைக்குகள் என அனைத்து வகையான வாகனங்களும் ஓட தொடங்கியுள்ளன.  தொடர்ந்து பெய்த கனமழையால் நகரெங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

வாகனங்கள் மழையை முன்னிட்டு மெல்ல ஊர்ந்து செல்ல தொடங்கின.  ஒரே இடத்தில் அதிக அளவிலான வாகனங்கள் குவிந்தது போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படுத்தியது.  மக்கள் தங்களுடைய பணிகளுக்காக செல்வதில் பாதிப்பு ஏற்பட்டு அவதி அடைந்தனர்.


Next Story