மராட்டியத்தில் ஒரே நாளில் 8,172- பேருக்கு கொரோனா தொற்று


மராட்டியத்தில் ஒரே நாளில் 8,172- பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 17 July 2021 7:48 PM GMT (Updated: 17 July 2021 7:48 PM GMT)

மராட்டியத்தில் கொரோனாவுக்கு 1 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாராவியில் புதிதாக தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை.


மும்பை, 

மராட்டியத்தில் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு குறையாமல் ஒரே சீராக இருந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று மாநிலத்தில் புதிதாக 8 ஆயிரத்து 172 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 62 லட்சத்து 5 ஆயிரத்து 190 ஆக அதிகரித்து உள்ளது. இதில் 59 லட்சத்து 74 ஆயிரத்து 594 பேர் குணமாகி உள்ளனர். நேற்று மட்டும் 8 ஆயிரத்து 950 பேர் குணமாகினர்.

தற்போது மாநிலம் முழுவதும் 1 லட்சத்து 429 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல மாநிலத்தில் மேலும் 124 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதுவரை வைரஸ் நோய்க்கு 1 லட்சத்து 26 ஆயிரத்து 851 பேர் உயிரிழந்து உள்ளனர்.

தலைநகர் மும்பையில் நேற்று புதிதாக 466 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. மேலும் 12 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதுவரை நகரில் 7 லட்சத்து 30 ஆயிரத்து 707 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 ஆயிரத்து 690 பேர் உயிரிழந்து உள்ளனர். இதேபோல நகாில் நோய் பரவல் இரட்டிப்பாகும் காலம் 995 நாட்களாக அதிகரித்து உள்ளது. தாராவியில் நேற்று புதிதாக ஒருவருக்கு கூட பாதிப்பு கண்டறியப்படவில்லை. தற்போது அங்கு 21 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story