பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமனம்


பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமனம்
x
தினத்தந்தி 18 July 2021 7:25 PM GMT (Updated: 18 July 2021 7:25 PM GMT)

பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நவ்ஜோத் சிங் சித்து அம்மாநில காங்கிரஸ் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அமிர்தசரஸ்,

பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பஞ்சாபில் ஆளும் கட்சியாக உள்ள காங்கிரசில் தற்போது உள்கட்சி பூசல் அதிகரித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே, பஞ்சாப் முதல்வர் அமரீந்தருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் பனிப்போர் நிலவியது. அமரீந்தரின் நடவடிக்கைகளை சித்து வெளிப்படையாகவே எதிர்த்துப் பேசி விமரிசித்து வந்தார்.

அமைச்சர் பதவியிலிருந்து விலகிய சித்து, பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்படலாம் எனத் தகவல் வெளியானது. ஆனால், சித்துவை தலைவராக நியமிக்க அமரீந்தர் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்பட்டது.

இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில், நவ்ஜோத் சிங் சித்து ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை சந்தித்துப் பேசி இருந்தார். இதற்கிடையே, சமீபத்தில் டெல்லி சென்ற பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.  

அதன்பின், செய்தியாளர்களை சந்தித்த அமரீந்தர் சிங், பஞ்சாப்பை பொறுத்தவரை சோனியா எடுக்கும் எந்த முடிவுக்கும் கட்டுப்படுவோம் என தெரிவித்தார். இந்நிலையில், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமனம் செய்யப்படுவதாக காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார்.

Next Story