ஒரு கோடி பேருக்கு 2 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்திய முதல் மாநிலமானது மராட்டியம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 26 July 2021 12:58 PM GMT (Updated: 26 July 2021 12:58 PM GMT)

மராட்டிய மாநிலத்தில் ஒரு கோடி பேருக்கு 2 டோஸ் கொரோனா தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மும்பை, 

கொரோனா இரண்டாம் அலை இந்தியாவில் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. மராட்டியம், கேரளா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்கள் தவிர்த்து மற்ற மாநிலங்களில் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.

கொரோனாவின் மூன்றாவது அலையை எதிர்கொள்ள அனைவருக்கும் தடுப்பூசி ஒன்றே தீர்வு என்று மத்திய அரசு உறுதியாக கூறி வருகிறது. மத்திய அரசு பரிந்துரைத்த கோவிஷீல்டு, கோவாக்சின் உள்ளிட்ட இரு தடுப்பூசிகள், பல மாநிலங்களில் செலுத்தப்பட்டு வருகிறது. 

இந்தியாவில் இதுவரை 42 கோடியே 96 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். இதில் முதல் டோஸ் 33 கோடியே 79 லட்சத்து 52 ஆயிரத்து 177 பேருக்கு போடப்பட்டுள்ளது. இரண்டாம் டோஸ் 9 கோடியே 17 லட்சத்து 2 ஆயிரத்து 195 பேருக்கு போடப்பட்டுள்ளது. வரும் டிசம்பருக்குள் 60 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுவிடும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் இந்தியாவில் மராட்டிய மாநிலத்தில் ஒரு கோடி பேருக்கு 2 டோஸ் கொரோனா தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் இந்தியாவில் ஒரு கோடி பேருக்கு 2 டோஸ் கொரோனா தடுப்பூசிகளும் செலுத்திய முதல் மாநிலமானது மராட்டிய மாநிலம் உருவெடுத்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மராட்டிய மாநிலத்தில் நேற்று 6,843 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதுவரை 62,64,922 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. நேற்று கொரோனா பாதிப்புக்கு 123 பேர் மரணம் அடைந்தனர். இதுவரை 1,31,552 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று 5,213 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், இதுவரை 60,35,029 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 94,985 பேர் சிகிச்சையில் உள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது. 

Next Story