கண்ணீருடன் பதவியை ராஜினாமா செய்தது பற்றி மக்களுக்கு சொல்வீர்களா? எடியூரப்பாவுக்கு கர்நாடக காங்கிரஸ் கேள்வி


கண்ணீருடன் பதவியை ராஜினாமா செய்தது பற்றி மக்களுக்கு சொல்வீர்களா? எடியூரப்பாவுக்கு கர்நாடக காங்கிரஸ் கேள்வி
x
தினத்தந்தி 26 July 2021 7:25 PM GMT (Updated: 26 July 2021 7:25 PM GMT)

கண்ணீருடன் பதவியை ராஜினாமா செய்தது குறித்து மக்களுக்கு சொல்வீர்களா? என்று எடியூரப்பாவுக்கு கர்நாடக காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.

கண்ணீர் சிந்தியது எதற்காக?

முதல்-மந்திரி பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்தது குறித்து கர்நாடக காங்கிரஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

சாம்ராஜ்நகரில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 36 பேர் இறந்தது எதிர்பாராத விபத்து அல்ல. கர்நாடக அரசின் அலட்சியத்தால் நடந்த சம்பவம். இறந்தவர்களின் குடும்பத்தினரின் வலி இன்னும் முடியவில்லை. கண்ணீ்ர் நிற்கவில்லை. எடியூரப்பா ராஜினாமா பற்றி அறிவிக்கும்போது கண்ணீர் விட்டு உள்ளார். மாநில முதல்-மந்திரி கண்ணீர் சிந்தும்போது அதை கேட்க குடிமகனுக்கு உரிமை உண்டு. எடியூரப்பா கண்ணீ்ா சிந்தியது எதற்காக?. கர்நாடக பா.ஜனதா முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்து குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். ஒரு கட்சியின் மூத்த தலைவர் கண்ணீர் விடுகிறார். இது அவர் 
சார்ந்த கட்சியின் மனப்பான்மையை காட்டுகிறது. அந்த கட்சியின் தலைவர்கள் காங்கிரஸ் தலைவர்கள் பற்றி பேசுவதை நிறுத்த வேண்டும்.

கட்சியின் ஒழுக்கம்
வருமான வரித்துறை, சி.பி.ஐ. பெயர்களை பயன்படுத்தி எடியூரப்பாவை ராஜினாமா செய்ய மிரட்டி இருக்கலாம். எடியூரப்பா ராஜினாமா குறித்து நளின்குமார் கட்டீல் எப்படி அறிந்து இருந்தார்?. சி.டி.ரவி, நளின்குமார் கட்டீல் வெற்றிக்கு வாழ்த்துகள்.உங்கள் பீஷ்மரை அம்புகளின் படுக்கையில் படுக்க வையுங்கள். வெற்றிகரமாக பதவியை முடிக்க வேண்டியவர்கள், அரசு நிகழ்வில் மேடையில் கண்ணீருடன் விடைப்பெற்று உள்ளார். நரேந்திர மோடி அரக்கன் என்பது உலகம் முழுவதும் தெரியும். ஊழல் தூதர் எடியூரப்பா. ஊழல் உங்கள் கட்சியின் சித்தாந்தமா? உங்கள் ஒழுக்கம் என்ன? முதல்-மந்திரிக்கு 
எதிராக அறிக்கை விடுவதா?. முதல்-மந்திரி குறித்து பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர்களை வளர்த்து விடுவது உங்கள் கட்சியின் ஒழுக்கம்.

மாநில மக்களுக்குசொல்வீர்களா?
எடியூரப்பா திடீர் ராஜினாமா குறித்து கர்நாடக பா.ஜனதா விளக்கம் அளிக்க வேண்டும். எடியூரப்பாவின் கண்ணீருக்கு துரோகம் காரணம் அல்லவா?. நளின்குமார் கட்டீல் குரலை மாற்றி பேசும் கலைஞர். பா.ஜனதாவுக்கு துரோகம் செய்த கட்டீல் இன்று உற்சாகமாக இருக்கிறார். நிர்வாக தோல்வியா?, மனஉளைச்சலா? மிரட்டலா? அச்சுறுத்தலா? கீழ்படியாமையா?. எடியூரப்பா அவர்களே நீங்கள் ஏன் கண்ணீருடன் பதவியை ராஜினாமா செய்தீர்கள் என்பது பற்றி மாநில மக்களுக்கு சொல்வீர்களா?.

அவமான கண்ணீர்
நிர்வாகம் செய்ய உங்களுக்கு திறமை, உரிமை இருக்கிறது என்று சொல்வீர்கள். அப்படி இருக்கும்போது திடீர் ராஜினாமா ஏன்?. பா.ஜனதாவின் ஆட்சியால் சோர்ந்து போன மக்கள் அரசாங்க மாற்றத்தை விரும்புகிறார்கள். தலைமை மாற்றத்தை அல்ல. தார்மீக, ஒழுக்கம் இருந்தால் கர்நாடக சட்டசபையை கலைக்க வேண்டும். பின்னர் மாநிலத்தை ஆள யார் தகுதியானவர்கள் என்பதை மக்கள் தீர்மானம் செய்வார்கள்.எடியூரப்பா ராஜினாமா அரசு தோல்வி, ஆளுமை தோல்வி, தலைமை தோல்வி ஆகியவற்றை வெளிப்படுத்தி உள்ளது. இது ஒரு திறமையான நிர்வாகமாக இருந்தால் எடியூரப்பா ராஜினாமா ஏன்?. எடியூரப்பா சிந்தியது பதவி விலகல் கண்ணீர் அல்ல. அவமான கண்ணீர்.

இவ்வாறு காங்கிரஸ் தெரிவித்து உள்ளது.

Next Story