ஜூன் மாதத்தில் தொழில் உற்பத்தி 13.6 சதவீதம் உயர்வு

ஜூன் மாதத்தில் தொழில் உற்பத்தி 13.6 சதவீதம் உயர்ந்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
கடந்த ஜூன் மாதத்தில், இந்தியாவின் தொழில் உற்பத்தி 13.6 சதவீதம் அதிகரித்துள்ளது. உற்பத்தி துறை, சுரங்கம், மின்சாரம் ஆகிய துறைகளில் உற்பத்தி கணிசமாக உயர்ந்ததுதான் இதற்கு காரணம் என்று தேசிய புள்ளியியல் அலுவலகம் கூறியுள்ளது.
இதுதொடர்பாக தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாட்டின் தொழில்துறை உற்பத்தி (ஐஐபி) சென்ற ஜூன் மாதத்தில் 13.6 சதவீத வளா்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே ஜூன் மாதத்தில் 16.6 சதவீதமாக வீழ்ச்சி அடைந்திருந்தது.
அதன்படி, 2021 ஜூனில் தயாரிப்பு துறையின் உற்பத்தி 13 சதவீத வளா்ச்சியைக் கண்டுள்ளது. அதேபோன்று, சுரங்கத் துறையின் உற்பத்தியும் 23.1 சதவீதம் உயா்ந்துள்ளது. மின்சார துறையின் உற்பத்தி ஜூனில் 8.3 சதவீத வளா்ச்சியை பதிவு செய்துள்ளது. நடப்பாண்டின் ஏப்ரல்-ஜூன் வரையிலான மூன்று மாத காலத்தில் ஐஐபி 45 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் இத்துறையின் வளா்ச்சி 35.6 சதவீதம் பின்னடைந்திருந்தது.
கொரோனா பேரிடரால் கடந்தாண்டு மாா்ச் மாதத்தில் தொழிலக உற்பத்தி 18.7 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. இந்த வீழ்ச்சி 2020 ஏப்ரலில் 57.3 சதவீதமானது என்று அதில் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story