ராஜஸ்தானில் ஜனவரி 31 வரை பட்டாசு விற்கவும், வெடிக்கவும் தடை


ராஜஸ்தானில் ஜனவரி 31 வரை பட்டாசு விற்கவும், வெடிக்கவும் தடை
x
தினத்தந்தி 1 Oct 2021 5:19 AM GMT (Updated: 1 Oct 2021 5:19 AM GMT)

ராஜஸ்தான் மாநிலத்தில் வருகின்ற ஜனவரி 31-ந் தேதி வரை பட்டாசு விற்கவும், வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜெய்பூர்,

இந்தியாவில் தற்போது கொரோனா 2-வது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் படிப்படியாக குறைந்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக கொரோனா பரவல் கணிசமான அளவு குறைந்துள்ளது. பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. 

அதே வேளையில், கொரோனா 3-வது அலை பரவல் ஏற்படாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் ஆலோசித்து வருகின்றன. குறிப்பாக 3-வது அலை ஏற்படாமல் தவிர்ப்பதற்கு, பண்டிகை காலங்களில் தொற்று பரவாமல் தடுக்க வேண்டியது மிகவும் அவசியம் என மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் அக்டோபர் 1(இன்று) முதல் வருகின்ற ஜனவரி 31 ஆம் தேதி வரை பட்டாசு வெடிக்கவும், விற்கவும் தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பட்டாசுகளில் இருந்து வெளிவரக்கூடிய புகை காரணமாக கொரோனவால் பாதிக்கப்பட்ட முதியவர்கள் மற்றும் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோயாளிகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் எனவும், கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் இந்த புகையால் மேலும் சில சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்பதாலும் பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story