இந்தியாவில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 91.54 கோடியாக உயர்வு


இந்தியாவில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 91.54 கோடியாக உயர்வு
x
தினத்தந்தி 5 Oct 2021 4:36 AM GMT (Updated: 5 Oct 2021 4:36 AM GMT)

இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 91 கோடியை தாண்டியதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16-ம் தேதியன்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டன. முதல்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில் அடுத்ததாக பிப்ரவரி 2-ம் தேதி முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடங்கப்பட்டது.

இதேபோல் மார்ச் 1-ம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், ஏப்ரல் 1-ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் இந்தியாவில் தொடங்கப்பட்டன. அதன்பின்னர், மே 1-ம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியது. இதையடுத்து, நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 91 கோடியை தாண்டியுள்ளது. 

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட தகவலின் படி, நாடு முழுவதும் நேற்று ஒரேநாளில் 72 லட்சத்து 51 ஆயிரத்து 419 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

இதன் மூலம் இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 91 கோடியே 54 லட்சத்து 65 ஆயிரத்து 826 ஆக அதிகரித்துள்ளது.

Next Story