கேரளாவில் கனமழைக்கு ஒருவர் பலி; 12 பேர் மாயம்

கேரளாவில் பெய்து வரும் கனமழைக்கு ஒருவர் பலியாகி உள்ளார். நிலச்சரிவில் சிக்கிய 12 பேரை காணவில்லை.
இடுக்கி,
அரபி கடல் மற்றும் வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, கேரளாவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கேரளாவில் 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கேரளாவின் பத்தனம்திட்டா, எர்ணாகுளம், கோட்டயம், இடுக்கி, திரிச்சூர், ஆகிய 5 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. அதேபோல், திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழையால் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால், நீர் நிலைகளுக்கு அருகில் மக்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. குறிப்பாக தெற்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று மாநில பேரிடர் மேலாண்மை நிர்வாகம் எச்சரித்துள்ளது.
கேரளாவில் பெய்து வரும் கனமழையை தொடர்ந்து, இடுக்கி மாவட்டம் தொடுபுழாவில் ஒருவர் பலியாகி உள்ளார். இதேபோன்று, கோட்டயம் நகரின் ஊரக பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. இதில் சிக்கிய 12 பேரை காணவில்லை. எனினும், போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினரால் சம்பவ பகுதிக்கு செல்ல முடியவில்லை.
Related Tags :
Next Story