நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது..!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 29 Nov 2021 5:48 AM GMT (Updated: 29 Nov 2021 7:53 AM GMT)

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கி உள்ளது.

புதுடெல்லி, 

வேளாண் துறை தொடர்பாக 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்தது. அந்த சட்டங்கள், இடைத்தரகர்கள் பிடியில் இருந்து விவசாயிகளை விடுவிக்கும் என்று மத்திய அரசு கூறியது. பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாய சங்கங்கள் அந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. விவசாயிகள் டெல்லி எல்லை பகுதிகளில் முற்றுகையிட்டு கடந்த ஆண்டு நவம்பர் 26-ந் தேதி போராட்டத்தை தொடங்கினர். ஓராண்டுக்கு மேலாக அவர்கள் போராடி வருகிறார்கள்.

இதற்கிடையே, கடந்த 19-ந் தேதி டெலிவிஷனில் உரையாற்றிய பிரதமர் மோடி, வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். இதற்கான மசோதா, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று அவர் கூறினார்.

இருப்பினும், நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரை போராட்டத்தை தொடர விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்து விட்டது.

கடந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முடக்கிய ‘பெகாசஸ்’ உளவு விவகாரம் இன்னும் நீடிக்கிறது. அந்த குற்றச்சாட்டு குறித்து விவாதிக்க சுப்ரீம் கோர்ட்டு ஒரு குழு அமைத்துள்ளது.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. சமையல் எரிவாயு விலை, ஆயிரம் ரூபாயை நெருங்கி வருகிறது. அருணாசலபிரதேசத்தில் சீன ராணுவம் கிராமங்களை உருவாக்கி வருவதாக சர்ச்சை எழுந்துள்ளது.

மேற்கு வங்காளம், அசாம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் எல்லை பாதுகாப்பு படைக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட்டு இருப்பதும் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் உருவான ‘ஒமிக்ரான்’ என்ற புதிய கொரோனா, இந்தியாவுக்கு வராமல் தடுப்பதில் மத்திய அரசுக்கு நெருக்கடி உருவாகி உள்ளது.

இந்நிலையில் இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. டிசம்பர் 23-ந் தேதி வரை இத்தொடர் நடக்க உள்ளது. மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளும் ஒரே நேரத்தில் நடக்கின்றன. கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி கூட்டத்தொடர் நடக்கிறது.

கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா தாக்கல் செய்யப்படும் என்று மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் ஏற்கனவே அறிவித்துள்ளார். அதையொட்டி, நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தும் முடிவை விவசாயிகள் ஒத்தி வைத்தனர்.

இதனிடையே மசோதாவை ஆதரித்தாலும், விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ அந்தஸ்து வேண்டும் என்ற விவசாயிகளின் இதர கோரிக்கைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பும் என்று தெரிகிறது. இதனால், சபையில் புயல் வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர, 25 மசோதாக்களை இந்த கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்த மத்திய அரசு பட்டியல் தயாரித்துள்ளது. அவற்றில் 3 மசோதாக்கள், அவசர சட்டங்களுக்கு மாற்றாக கொண்டுவரப்படுபவை.

போதை மருந்து தடுப்பு மசோதா, சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு இயக்குனர்களின் பதவிக்காலத்தை நீட்டிப்பதற்கான மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணைய திருத்த மசோதா, டெல்லி சிறப்பு போலீஸ் ஸ்தாபன திருத்த மசோதா ஆகியவைதான் அந்த மசோதாக்கள். தனியார் கிரிப்டோ கரன்சிகளுக்கு தடை விதிக்கும் மசோதா குறிப்பிடத்தக்கது.

உத்தரபிரதேசம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் எஸ்.சி., எஸ்.டி. பட்டியலை மாற்றி அமைப்பதற்கான அரசியல் சட்ட திருத்த மசோதாக்கள், சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகள் சம்பளத்தை திருத்துவதற்கான மசோதா, திவால் சட்ட (இரண்டாவது திருத்தம்) மசோதா, ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை ஆணைய திருத்த மசோதா, குடியேற்ற மசோதா, ஆள் கடத்தல் தடுப்பு மசோதா ஆகியவை இந்த மசோதாக்களில் முக்கியமானவை.

தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதாவை ஆய்வு செய்த நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் அறிக்கையும் இந்த தொடரில் தாக்கல் செய்யப்படுகிறது. இதுதவிர, சமையல் எரிவாயு விலை உயர்வு, சீன ஆக்கிரமிப்பு, எல்லை பாதுகாப்பு படை கூடுதல் அதிகாரம், ‘பெகாசஸ்’ உளவு விவகாரம் போன்ற பிரச்சினைகளை எழுப்பி, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடும் என்று தெரிகிறது. இதனால், இந்த கூட்டத்தொடரில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பிரதமர் மோடி, “இது நாடாளுமன்றத்தின் முக்கியமான கூட்டத்தொடர். செயல்பாடு மிக்க கூட்டத்தொடராக இது அமைய வேண்டும் என நாட்டு மக்கள் விரும்புகின்றனர். ஒளிமயமான எதிர்காலத்திற்காக அவர்கள் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுகிறார்கள்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க தயாராக உள்ளோம். அனைத்து கேள்விகளுக்கு பதில் அளிக்க எங்கள் அரசு தயாராக உள்ளது. நாடாளுமன்றத்தில் நாம் விவாதிக்க வேண்டும். மேலும், நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்” என்று அவர் தெரிவித்தார். 



இதனிடையே நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மற்றும் எம்.பி. ராகுல் காந்தி ஆகியோர் நாடாளுமன்றத்துக்கு வருகை தந்தனர். இதனைத்தொடர்ந்து மத்திய அரசின் மூன்று விவசாயச் சட்டங்களை ரத்து செய்யக் கோரி காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் அக்கட்சியினர் காந்தி சிலை முன்பு போராட்டம் நடத்தினர்.

Next Story