இந்தியாவில் கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1 லட்சத்திற்கு கீழ் குறைந்தது...!!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 1 Dec 2021 4:46 AM GMT (Updated: 1 Dec 2021 4:46 AM GMT)

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,954 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

புதுடெல்லி, 

உலகமெங்கும் ஒமிக்ரான் வைரஸ் பரவல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிற வேளையில் நமது நாட்டில் கொரோனா இரண்டாவது அலை தனது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. 

இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து பதிவாகி வருகிறது. நேற்று முன்தினம் 6 ஆயிரத்து  990 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் சற்று உயர்ந்து புதிதாக 8,954 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. ( அதில் கேரளாவில் மட்டும் 4,723 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது).

இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8 ஆயிரத்து 954 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,45,96,776 ஆக அதிகரித்துள்ளது. 

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 267 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,69,247 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் உயிரிழப்பு விகிதம் 1.36 % ஆக உள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 10,207 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,40,28,506 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 98.36 % ஆக உள்ளது.  

மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 99,023 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 1,24,10,86,850 பேருக்கு (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 80,98,716 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 7,04,30,421 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 11,08,467 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 64,24,12,315 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.

Next Story