சவுதி அரேபியாவில் பயங்கர கார் விபத்து - கேரளாவை சேர்ந்த மொத்த குடும்பமும் பலியான சோகம்!


சவுதி அரேபியாவில் பயங்கர கார் விபத்து - கேரளாவை சேர்ந்த மொத்த குடும்பமும் பலியான சோகம்!
x
தினத்தந்தி 5 Dec 2021 8:19 AM GMT (Updated: 5 Dec 2021 8:19 AM GMT)

சவுதி அரேபியாவில் ஏற்பட்ட கார் விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று வயதே ஆன குழந்தை உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோழிக்கோடு,

கேரள மாநிலம் கோழிக்கோடு பேய்ப்பூர் பகுதியை பூர்வீகமாக கொண்ட முகமது ஜாபிர்(48), அவருடைய மனைவி ஷப்னா(36) மற்றும் மூன்று குழந்தைகளும் சவுதி அரேபியாவின் ஜுபைல் நகரில் வசித்து வருகின்றனர். ஜாபிர் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அவருக்கு சவுதி அரேபியாவின் தென்மேற்கு பகுதியில் இருக்கும் ஜிஸான் நகருக்கு பணி மாறுதல் கிடைத்துள்ளது.

இதனால் அவர் தனது குடும்பத்தினருடன் தற்போது வசித்து வரும்  ஜுபைல் நகரில் இருந்து ஜிஸான் நகருக்கு குடிபெயர்வதற்காக வீட்டின் சாமான்களை ஒரு வண்டியில் ஏற்றி அனுப்பிவிட்டு பின் அவர் தனது குடும்பத்தினருடன் காரில் பயணித்துள்ளார்.

சம்பவம் நடந்த நேற்று அதிகாலை, அவர்கள் அனைவரும் காரில் பயணித்து கொண்டிருந்தனர். பொருட்களை ஏற்றி சென்ற வண்டியும் சில உறவினர்களும்  ஜிஸான் நகருக்கு சென்று அடைந்துவிட்டனர். ஆனால் ஜாபிர் குடும்பத்தினர் அங்கு வந்து சேரவில்லை. அதன்பின்னர் தான் அவர்கள் பயணித்த கார் விபத்தில் சிக்கியிருப்பது தெரிய வந்தது.

ரியாத் நகரத்திலிருந்து 200 கி.மீ தூரத்தில் இந்த விபத்து நடந்துள்ளது.பிஷா மாகாணத்தில் அவர்களுடைய கார் சென்று கொண்டிருக்கும் போது  பின்னால் வந்த வேகமான கார் கண்ணிமைக்கும் நேரத்தில் அசுர வேகத்தில் இவர்கள் கார் மீது மோதியது. அதில் நிலை தடுமாறிய இவர்களுடைய கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

விபத்தில் ஜாபிர்(48 வயது), அவருடைய மனைவி ஷப்னா(36 வயது), மூன்று வயதே ஆன குழந்தை லுத்பி மற்றும் குழந்தைகள் சஹா(5 வயது) மற்றும் லைபா(7 வயது) உள்பட அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.  அவர்களுடைய உடல் அl-ரெயின் மருத்துவமனையில் இருக்கும் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த கோர சம்பவம் குறித்து தகவல் அறிந்த அவர்களுடைய உறவினர்களும் நண்பர்களும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

கோழிக்கோடு மாவட்டம் பேய்ப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் பொதுப்பணித்துறை மந்திரியுமான முகமது ரியாஸ் இறந்தவர்களின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த சம்பவம் குறித்து அவர் பேசும்போது, “ இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். இந்த விபத்து அனைவரையும் கவலையில் மூழ்கச் செய்துள்ளது.இறந்தவர்களுடைய உடல்களை கேரளாவுக்கு விரைந்து கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்று கூறினார். 

சவுதி அரேபியாவில் ஏற்பட்ட கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த மொத்த குடும்பமும் பலியான சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.


Next Story