‘ஜீரோ பட்ஜெட்’ என விமர்சித்த ராகுல்காந்திக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி..!!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 1 Feb 2022 12:04 PM GMT (Updated: 1 Feb 2022 12:15 PM GMT)

‘ஜீரோ பட்ஜெட்’ என விமர்சித்த ராகுல்காந்திக்கு மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்துள்ளார்.

புதுடெல்லி,

நடப்பாண்டின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், பட்ஜெட் குறித்த கேள்விகளுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்து பதில் அளித்தார். 

அப்போது பேசிய அவர், “கொரோனாவால் பாதிப்பை சந்தித்த அனைத்து துறைகளின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. கொரோனா பெருந்தொற்று காலத்தில் சுற்றுலா மட்டும் உணவு சேவை துறைகள் அதிக சிரமத்திற்கு ஆளானதால் அவசர கால கடனுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

வரிவசூல் குறிக்கோள்கள் சாத்தியமாகும் அளவிலேயே கணக்கிடப்பட்டுள்ளன. எல்.ஐ.சி பங்குகளை மதிப்பிடும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த பட்ஜெட்டிலும், இந்த பட்ஜெட்டிலும் ஒரு ரூபாய் கூட வரி உயர்த்தப்படவில்லை.

கொரோனா காலத்தில் அதிக சவால்களை எதிர்கொண்ட போதும் வரியை உயர்த்தவில்லை. மத்திய ரிசர்வ் வங்கி ஒரு டிஜிட்டல் நாணயத்தை வெளியிடும், கிரிப்டோ மற்றும் கிரிப்டோ சொத்துக்கள் என்ன என்பது பற்றி இப்போது எந்த விவாதமும் தேவை இல்லை. சம்பந்தப்பட்டவர்களுடன் ஆலோசனை நடந்து வருகிறது. டிஜிட்டல் சொத்துகள் குறித்த விவரம் ஆலோசனைக்கு பிறகு தெரியவரும் என்று நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘ஜீரோ பட்ஜெட்’ என விமர்சித்த ராகுல்காந்திக்கு நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்தார். இதுதொடர்பாக பேசிய அவர், “டுவிட்டரில் விரைவான விமர்சனம் செய்பவர்களுக்காக நான் பரிதாபப்படுகிறேன். பட்ஜெட் தொடர்பாக வெளியாகும் விமர்சனங்களை ஏற்கத் தயாராக இருக்கிறேன். சொந்த வேலையையே செய்ய தெரியாத இந்தியாவின் பழமையான அரசியல் கட்சியின் தலைவரின் விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள மாட்டேன்” என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Next Story