இஸ்லாமிய நாடுகளிலும் ஹிஜாப் கட்டாயமல்ல - மத்திய கல்வித்துறை இணை மந்திரி பேச்சு


இஸ்லாமிய நாடுகளிலும் ஹிஜாப் கட்டாயமல்ல - மத்திய கல்வித்துறை இணை மந்திரி பேச்சு
x
தினத்தந்தி 26 Feb 2022 1:05 PM GMT (Updated: 26 Feb 2022 1:05 PM GMT)

இஸ்லாமிய நாடுகளிலும் ஹிஜாப் அணிவது கட்டாயமல்ல என்று மத்திய கல்வித்துறை இணை மந்திரி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா,

கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் மாணவ-மாணவிகள் சீருடை அணிந்து வர வேண்டும் என்று அந்த கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது. 

ஆனால், அந்த கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் சிலர் சீருடை மீது ஹிஜாப் (தலைப்பகுதியை மூடும் உடை) அணிந்து வந்தனர். இதற்கு அந்த கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. அந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மதத்தை சேர்ந்த அந்த மாணவிகள் பர்தா (உடல் முழுவதும் மூடும் உடை) அணிந்து போராட்டம் நடத்தினர். 

இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த கல்லூரியில் படிக்கும் இந்து மதத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் காவி துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு பள்ளி, கல்லூரிகளுக்குள் மாணவ-மாணவிகள் மத அடையாளத்தை வெளிப்படுத்தும் உடைகளை அணிந்து வரக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக ஐகோர்ட்டில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.  

இந்நிலையில், மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் இன்று மத்திய கல்வித்துறை இணை மந்திரி சுபாஷ் சர்கார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவரிடம் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த மத்திய கல்வித்துறை இணை மந்திரி, இஸ்லாமிய நாடுகளிலும் ஹிஜாப் அணிவது கட்டாயமல்ல. அரசியல் சித்தாந்தங்களுக்காக சிலர் ஹிஜாப் விவகாரத்தை எழுப்பியுள்ளனர்’ என்றார்.  

Next Story