மே.வங்காளத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்: பாஜகவின் குஷ்பு வலியுறுத்தல்


மே.வங்காளத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்: பாஜகவின் குஷ்பு வலியுறுத்தல்
x
தினத்தந்தி 15 April 2022 9:53 AM GMT (Updated: 15 April 2022 9:53 AM GMT)

மேற்கு வங்காள முதல் மந்திரி பதவியில் இருந்து மம்தா பானர்ஜி விலக வேண்டும் எனவும் குஷ்பு ஏ.என்.ஐ செய்தி நிறுனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா, 

மேற்குவங்காள மாநிலம் நந்தியா மாவட்டம் ஹன்ஷகில் கிராமத்தை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் சமரிந்திர கயாலி. திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகியான இவரின் மகன் பராஜ்கோபால் (21 வயது). சமரிந்திர கயாலின் மகன் பராஜ்கோபால் கடந்த 5-ம் தேதி இரவு தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளான். அந்த பிறந்தநாள் விழாவில் அதேகிராமத்தை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி பங்கேற்றுள்ளார்.

பிறந்தநாள் விழாவில் பங்கேற்றந்த சிறுமி பராஜ்கோபால் மற்றும் அவனது நண்பர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக சிறுமியின் பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.  இதனை தொடர்ந்து கடந்த 10-ம் தேதி சிறுமியின் பெற்றோர் நடந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளனர். 

சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக  அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, இவ்விவகாரத்தில் பாஜக உண்மை கண்டறியும் குழுவை அமைத்தது. இந்தக் குழுவில்  வானதி சீனிவாசன், குஷ்பு உள்ளிட்டோர் இடம் பெற்று இருந்தனர். 

இன்று இந்தக் குழுவினர் ஹன்ஷகில் பகுதிக்கு சென்று  பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்துப்பேசியது. பின்னர் செய்தியாளர்களுகுப் பேட்டி அளித்த குஷ்பு, 14-வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கண்டனத்திற்குரிய கருத்தை பெண் முதல் மந்திரி தெரிவித்துள்ளார். மம்தா பானர்ஜி மன்னிப்பு கோர வேண்டும். மேற்கு வங்காளத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம்.  மம்தா பானர்ஜி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என்றார். 

அதேபோல் பாஜக எம்.பி ரேகா வர்மா கூறுகையில், “ நாங்கள் எங்கள் அறிக்கையை பாஜக தலைவர் ஜேபி நட்டாவிடம் நாளை சமர்பிப்போம். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை  முதல் மந்திரி ஏற்றுக்கொள்ளவில்லை.  மேற்கு வங்காளத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை” என்றார். 


Next Story