உலகளாவிய 2-வது கொரோனா உச்சி மாநாடு: இன்று பங்கேற்று பேசுகிறார் பிரதமர் மோடி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 12 May 2022 12:21 AM GMT (Updated: 12 May 2022 12:21 AM GMT)

இன்று காணொலிக்காட்சி வழியாக நடக்கிற உலகளாவிய 2-வது கொரோனா உச்சி மாநாட்டில், அமெரிக்க ஜனாதிபதி அழைப்பின்பேரில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார்.

புதுடெல்லி, 

சீனாவின் உகான் நகரில் 2019-ம் ஆண்டு முதன் முதலாக காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று, உலகமெங்கும் பரவி விட்டது.

தடுப்பூசிகள் கண்டுபிடித்து பொதுமக்களுக்கு செலுத்தப்படுகிற நிலை வந்தபின்னர் தொற்றின் ஆபத்து குறைந்துள்ளது. அதே நேரத்தில் புதிய உருமாறிய கொரோனா வைரஸ்கள் வெளிப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் கொரோனா நிலைமை பற்றி விவாதிக்க 2-வது கொரோனா உச்சி மாநாடு இன்று (வியாழக்கிழமை) காணொலிக்காட்சி வழியாக நடக்கிறது.

இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அழைப்பின்பேரில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். மாநாட்டின் தொடக்கத்தில், ‘தொற்று நோய் சோர்வைத் தடுத்தலும், தயார் நிலையில் முன்னுரிமை அளித்தலும்’ என்ற தலைப்பில் நடைபெறுகிற அமர்வில் பிரதமர் மோடி பேசுகிறார்.

தொடக்க அமர்வு மாலை 6.30 மணி முதல் 7.45 மணி வரை நேரடியாக ஒளிபரப்பாகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நடத்திய உலகளாவிய முதல் கொரோனா உச்சி மாநாட்டிலும் பிரதமர் மோடி கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்த உலகளாவிய 2-வது கொரோனா உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியுடன் ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் மற்றும் பல்வேறு முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான உலகளாவிய போரில், மலிவு விலை தடுப்பூசிகள், மருந்துகள், பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கான குறைந்த கட்டண உள்நாட்டுதொழில் நுட்பங்களை உருவாக்குதல், மரபணு கண்காணிப்பு, சுகாதார பணியாளர்களுக்கான திறன் மேம்பாடு என பல விதங்களில் இந்தியா முக்கிய பங்களிப்பை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story