20 நாய்களுடன் 2 ஆண்டுகளாக அடைத்து வைக்கப்பட்ட 11 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்


20 நாய்களுடன் 2 ஆண்டுகளாக அடைத்து வைக்கப்பட்ட 11 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்
x
தினத்தந்தி 12 May 2022 2:44 AM GMT (Updated: 12 May 2022 2:44 AM GMT)

2 ஆண்டுகளாக 20க்கும் மேற்பட்ட தெரு நாய்களுடன் குடியிருப்பில் அடைத்து வைக்கப்பட்ட 11 வயது சிறுவன் நாய்களை போன்று செயல்படும் கொடூர நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளான்.




புனே,


மராட்டியத்தின் புனே நகரில் கொந்தவா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் அதிர்ச்சி ஏற்படுத்தும் சம்பவம் நடந்து உள்ளது.  அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் 11 வயது சிறுவன் 20க்கும் மேற்பட்ட தெரு நாய்களுடன் அடைத்து வைக்கப்பட்டு உள்ளான்.

இதனை அந்த பகுதியில் வசிக்கும் ஒருவர் முதலில் கவனித்து உள்ளார்.  இதுபற்றி நியான் தேவி குழந்தைகள் நல தொண்டு நிறுவனத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி தகவல் தெரிவித்து உள்ளார்.

அந்த அமைப்பை சேர்ந்த சகஸ்ரபுத்தே இதுபற்றி கூறும்போது, கொந்தவா பகுதியில் குடியிருப்பில் அடைத்து வைக்கப்பட்ட சிறுவனை அந்த பகுதியில் வசிப்பவர்கள் ஜன்னல் வழியே பார்த்து உள்ளனர்.  அவன் மனநிலை பாதிக்கப்பட்டவன் போன்று காணப்படுகிறான்.

எங்களுடைய உறுப்பினர்கள் சம்பவ பகுதிக்கு சென்றனர்.  குடியிருப்பின் வெளியே பூட்டியிருந்தது.  ஆனால், சிறுவனும், நாய்களும் உள்ளே இருந்தனர்.  4 நாய்கள் இறந்த நிலையில் கிடந்துள்ளன.  அந்த குடியிருப்பில் இருந்து விலங்குகளின் கழிவுகள் அகற்றப்படாமல், தூய்மையற்ற நிலையில் இருந்தது.  அந்த சூழலில் சிறுவன் அடைத்து வைக்கப்பட்டு உள்ளான்.

போலீசாரும் எங்களுக்கு ஒத்துழைக்கவில்லை.  இதன்பின் நாங்கள் சிறுவனின் பெற்றோரிடம் பேசினோம்.  அவர்கள் திரும்பி வந்து, குழந்தையை மீட்கும்படி போலீசாரிடம் உதவி கேட்டனர்.  ஒருவழியாக சிறுவனை மீட்டு விட்டோம்.  ஆனால், போலீசார் வழக்கு எதுவும் பதிய விரும்பவில்லை.  இதுபற்றி குழந்தைகள் நல குழுவிடம் தெரிவித்து உள்ளோம் என கூறியுள்ளார்.

2 ஆண்டுகளாக நாய்களுடன் சிறுவனை அடைத்து வைத்துள்ளனர்.  அதனால், அவனது செயல்களில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.  அவன் நாய்களை போன்றே செயல்பட தொடங்கியுள்ளான்.  இதனால், அவனது பள்ளி படிப்பும் நின்று விட்டது.

சிறுவனுக்கு முறையான சிகிச்சை, கவுன்சிலிங் வழங்க போலீசாரிடம் வலியுறுத்தி உள்ளோம்.  குழந்தைகள் நல குழுவின் உத்தரவுகளையும் பின்பற்ற கேட்டு கொண்டுள்ளோம் என அவர் கூறியுள்ளார்.

சிறுவனின் தந்தை கடை ஒன்றை நடத்தி வருகிறார்.  சிறுவனின் தாயார் பட்டப்படிப்பு படித்துள்ளார்.  அந்த பெற்றோர் நாய்களின் மீது அன்புடன் இருந்துள்ளனர்.  அதனால், அவற்றை வீட்டில் வைத்திருக்கின்றனர் என்றும் சகஸ்ரபுத்தே கூறியுள்ளார்.

2 ஆண்டுகளாக நாய்களுடன் சிறுவனை அடைத்து வைத்து, அவனுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதற்காக, அவனது பெற்றோரை கைது செய்ய முடிவு செய்திருக்கிறோம் என்று மூத்த காவல் ஆய்வாளர் சர்தார் பாட்டீல் தெரிவித்து உள்ளார்.


Next Story