பாஜகவுடன் கூட்டணி வைத்து 25 ஆண்டுகளை சிவசேனா வீணடித்துவிட்டது: பாஜக அரசை கடுமையாக விமர்சித்த உத்தவ் தாக்கரே


பாஜகவுடன் கூட்டணி வைத்து 25 ஆண்டுகளை சிவசேனா வீணடித்துவிட்டது: பாஜக அரசை கடுமையாக விமர்சித்த உத்தவ் தாக்கரே
x
தினத்தந்தி 14 May 2022 4:50 PM GMT (Updated: 14 May 2022 4:50 PM GMT)

யாரை நம்பி வாக்களித்தோமோ அவர்கள் ஆட்சிக்கு வந்ததும் முதுகில் குத்துகிறார்கள் என்று பாஜக அரசை கடுமையாக தாக்கி பேசினார்.

மும்பை,

மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா வளாகத்தில் ஆளும் சிவசேனா கட்சியின் ‘சிவ் சம்பர்க் அபியான்’ பிரம்மாண்ட பேரணி தொடங்கியது. இந்த மாபெரும் பேரணியில் லட்சக்கணக்கான சிவசேனா கட்சி தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

மராட்டிய மாநில முதல் மந்திரி உத்தவ் தாக்கரே பாஜகவைத் தாக்கி தனது உரையைத் தொடங்கினார். அவர் பேசியதாவது:-

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புத்காம் மாவட்டத்தில், அரசு ஊழியராக பணியாற்றி வந்த ராகுல் பட் என்ற காஷ்மீர் பண்டிட் கொல்லப்பட்டார்.காஷ்மீரில் உள்ள தெஹ்சில் அலுவலகத்தில் ராகுல் பட் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார், இப்போது நீங்கள் (பாஜக) என்ன செய்வீர்கள்? அங்கே அனுமான் சாலிசா படிப்பீர்களா?

தாவூத் இப்ராகிம் பாஜகவில் இணைவதாக வாக்குறுதி அளித்தால், தாவூத் இப்ராகிமுக்கு அவர்கள் (பாஜக) கட்சி சீட்டு கூட கொடுக்கலாம். அப்போது அவர் மந்திரியாக கூட ஆகலாம். நாட்டில் நிலைமை அந்த அளவிற்கு மிக மிக ஆபத்தானதாக உள்ளது.

நான் உங்களை எச்சரிக்கிறேன், நீங்கள் மத்திய அமைப்புகளை பயன்படுத்தி பொய் வழக்குகளை பதிவு செய்து என் மக்களை தொந்தரவு செய்தால் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்.தகுந்த பதிலடி கொடுப்போம். உங்களில் ஒருவர் கூட தப்ப முடியாது.
இப்போது ஏற்பட்டிருக்கும் பணவீக்கம் விலைவாசி உயர்வு குறித்து யாரும் பேசுவதில்லை. பாஜகவுடன் கூட்டணி வைத்து 25 ஆண்டுகளை நாங்கள் வீணடித்தோம். அவர்கள் மிக மோசமானவர்கள்.

பாஜக ஒரு போலி 'இந்துத்துவா' கட்சி. முன்பு எங்களுடன் பாஜக சேர்ந்து இருந்தது. இப்போது நம் நாட்டை நரகத்திற்கு கொண்டு சென்றுள்ளது பாஜக.

இவ்வாறு அவர் பாஜக அரசை கடுமையாக தாக்கி பேசினார். 

Next Story