அசாம் வெள்ளம்; 20 மாவட்டங்களில் 1.97 லட்சம் பேர் பாதிப்பு


அசாம் வெள்ளம்; 20 மாவட்டங்களில் 1.97 லட்சம் பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 17 May 2022 1:16 AM GMT (Updated: 17 May 2022 1:16 AM GMT)

அசாமில் வெள்ளம் ஏற்பட்டு 20 மாவட்டங்களை சேர்ந்த 1.97 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.





கவுகாத்தி,



வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் கடந்த 4 நாட்களாக தொடர் மழை பெய்து பல்வேறு ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது.  கொபிலி ஆற்றில் அபாய அளவை கடந்து வெள்ளநீர் ஓடுகிறது.  பிரம்மபுத்திரா ஆற்றிலும் அபாய அளவை கடந்து வெள்ளநீர் ஓடுகிறது.

இந்த ஆண்டில் முதல் முறையாக ஏற்பட்டு உள்ள இந்த வெள்ள பெருக்கால் கச்சார், திமஜி, ஹொஜய், கர்பி அங்லோங் மேற்கு, நகாவன் மற்றும் கம்ரூப் (மெட்ரோ) ஆகிய 6 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன.  தொடர் மழையால் தீம ஹசாவோ மாவட்டத்தின் 12 கிராமங்களில் நில சரிவுகள் ஏற்பட்டு உள்ளன.

கச்சார் மாவட்டத்தில் மட்டுமே 51,357 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  வெள்ளம் சூழ்ந்த நிலையில், 46 வருவாய் வட்டங்களுக்கு உட்பட்ட 652 கிராமங்களை சேர்ந்த மொத்தம் 1.97 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

வெள்ளநீரில் 16,645.61 ஹெக்டேர் பயிர் நிலங்கள் மூழ்கியுள்ளன என அசாம் மாநில பேரிடர் மேலாண் கழகம் தெரிவித்து உள்ளது.

கச்சார் மாவட்டத்தில் 2 பேர் உயிரிழந்து உள்ளனர்.  ஒரு குழந்தை உள்பட 3 பேரை காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.  இதனை தொடர்ந்து, 55 நிவாரண முகாம்கள் மற்றும் 12 வினியோக மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.  அவற்றில் 32,959 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இதுதவிர, 1,400க்கும் கூடுதலான கால்நடைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உள்ளன.  மொத்தம் 200க்கும் கூடுதலான வீடுகள் வெள்ளத்தின் பிடியில் சிக்கி பாதிக்கப்பட்டு உள்ளன.

1,400 பயணிகளை உள்ளடக்கிய 2 ரெயில்கள் நடுவழியில் நின்றன.  அவர்களில் 1,245 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.  119 பயணிகள் விமானம் வழியே சில்சார் கொண்டு செல்லப்பட்டனர்.

ஹொஜய், லகீம்பூர் மற்றும் நகாவன் மாவட்டங்களில் பல்வேறு சாலைகள், பாலங்கள் மற்றும் நீர்ப்பாசன கால்வாய்கள் வெள்ள நீரால் பாதிக்கப்பட்டு உள்ளன.  பெரிய அளவிலான நிலச்சரிவுகள் மற்றும் தேங்கிய நீர் ஆகியவற்றால் ரெயில்வே தண்டவாளங்கள், பாலங்கள் மற்றும் சாலை போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன.

வெள்ளம் பாதித்த மக்களை மீட்கும் பணியில் ராணுவம், துணை ராணுவ படைகள், அசாம் பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு மற்றும் அவசரகால சேவை துறையை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.  நிவாரண பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நியூ கஞ்ஜங், பியாங்புய், மவுல்ஹோய், நம்ஜேஉராங், தெற்கு பகிதர், மகாதேவ் தில்லா, காளிபாரி, வடக்கு பகிதர், ஜியான் மற்றும் லோடி பங்மவுல் கிராமங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு உள்ளன.  நிலச்சரிவுகளால் ஜதிங்கா-ஹரங்காஜாவோ மற்றும் மஹூர்-பியாதிங் பகுதிகளில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது.


Next Story