ஓட்டலில் ரூ. 22 லட்சம் பில் பாக்கி: தொழிலதிபர்களின் கார்களை ஏலம் விட முடிவு - சுற்றுலாத்துறை அதிரடி


ஓட்டலில் ரூ. 22 லட்சம் பில் பாக்கி: தொழிலதிபர்களின் கார்களை ஏலம் விட முடிவு - சுற்றுலாத்துறை அதிரடி
x

சண்டிகரில் சுற்றுலாத்துறைக்கு சொந்தமான ஓட்டலில் ரூ.22 லட்சம் பில் கட்டாத தொழிலதிபர்களின் கார்களை ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

சண்டிகர்,

சண்டிகரில் சுற்றுலாத்துறைக்கு சொந்தமான ஓட்டலில் 22 லட்சம் ரூபாய் பில் கட்டாத இரண்டு தொழிலதிபர்களின் கார்களை ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

சண்டிகர் தொழில்துறை மற்றும் சுற்றுலா கழகத்திற்கு (சிட்கோ) சொந்தமான ஓட்டல் ஷிவாலிக்வியூ. இந்த ஓட்டலில் கடந்த 2018-ம் ஆண்டு லூதியானாவைச் சேர்ந்த அஷ்வனி சோப்ரா மற்றும் ஃபெரோஸ்பூரைச் சேர்ந்த ராம்னிக் பன்சால் என்ற இரண்டு தொழிலதிபர்கள் தங்கிவிட்டு, பணம் செலுத்தாமல் வெளியேறினர்.

இதையடுத்து அவர்களிடமிருந்து 55 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆடி மற்றும் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சவ்ரோலட் சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில், கோர்ட்டு உத்தரவுப்படி அவற்றை ஏலத்தில் விட சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, இரண்டு சொகுசு கார்களும் வருகிற 14-ம் தேதி ஏலத்தில் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப விலையாக 55 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆடி காருக்கு ரூ.10 லட்சமும், 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சவ்ரோலட் காருக்கு ஒன்றரை லட்சமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Next Story