குருவாயூர் கோவிலில் 263 கிலோ தங்கம் - ஆலய நிர்வாகம் தகவல்


குருவாயூர் கோவிலில் 263 கிலோ தங்கம் - ஆலய நிர்வாகம் தகவல்
x

குருவாயூர் கோவிலுக்கு சொந்தமாக 263 கிலோ தங்கமும், 6 ஆயிரத்து 605 கிலோ வெள்ளியும் இருப்பதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருச்சூர்,

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குருவாயூரில் உலகப்புகழ்பெற்ற கிருஷ்ணர் கோவில் உள்ளது. நூற்றாண்டுகள் பழமையான இக்கோவிலுக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சென்று வருகிறார்கள். இதற்கிடையே, குருவாயூரை சேர்ந்த எம்.கே.ஹரிதாஸ் என்பவர், கோவில் தேவஸ்தான நிர்வாகத்தின் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சில தகவல்களை கோரி விண்ணப்பித்தார். கோவிலின் சொத்து விவரம், வங்கிக்கணக்கில் உள்ள பணம் உள்ளிட்ட விவரங்களை அவர் கேட்டிருந்தார்.

அதற்கு கடந்த மாதம் கோவில் நிர்வாகம் அளித்த பதிலில், குருவாயூர் கோவிலுக்கு சொந்தமாக வங்கிக்கணக்குகளில், ரூ.1,737 கோடி டெபாசிட் இருப்பதாகவும், கோவிலுக்கு சொந்தமாக 271 ஏக்கர் நிலம் இருப்பதாகவும் கூறியிருந்தது. மேலும், தங்கம், வெள்ளி இருப்பதாகவும், பாதுகாப்பு காரணங்களுக்காக அவற்றை தெரிவிக்க முடியாது என்றும் கூறியிருந்தது.

இருப்பினும், மனுதாரர் ஹரிதாஸ், அந்த தகவல்களையும் கேட்டு, மேல்முறையீடு செய்தார். அதைத்தொடர்ந்து, கோவில் நிர்வாகம் தங்கம் தொடர்பான விவரங்களையும் அளித்துள்ளது. அதன்படி, கோவிலுக்கு சொந்தமாக 263 கிலோ தங்கம் உள்ளது. இவற்றில், விலை உயர்ந்த கற்களும், நாணயங்களும் அடங்கும்.

6 ஆயிரத்து 605 கிலோ வெள்ளியும், 19 ஆயிரத்து 981 தங்க லாக்கெட்டுகளும், 5 ஆயிரத்து 359 வெள்ளி லாக்கெட்டுகளும் உள்ளன. ஆனால், சில பொருட்களின் பழமை தெரியாததால், இவற்றின் மொத்த மதிப்பை கோவில் நிர்வாகம் தெரிவிக்கவில்லை.


Next Story