பூமியில் இருந்து 30 கி.மீ. உயரத்தில் பறக்க விடப்பட்ட இந்திய தேசிய கொடி


பூமியில் இருந்து 30 கி.மீ. உயரத்தில் பறக்க விடப்பட்ட இந்திய தேசிய கொடி
x

பூமியில் இருந்து 1 லட்சத்து 6 ஆயிரம் அடி உயரத்திற்கு கொண்டு செல்லப்பட்ட தேசிய கொடி பின்னர் பறக்க விடப்பட்டது.

புதுடெல்லி,



நாடு முழுவதும் ஓராண்டுக்கு, இந்தியா விடுதலை அடைந்ததன் 75-வது ஆண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனை முன்னிட்டு வீடுதோறும் மூவர்ண கொடியை மக்கள் ஏற்றி வருகின்றனர். இந்தியாவின் 76-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா என்ற அமைப்பு, சமீபத்தில் செயற்கைக்கோள் ஒன்றை விண்ணில் செலுத்தி பூமியின் குறைந்த தூர வட்டபாதையில் நிலைநிறுத்தியது. ஆசாதிசாட் என்ற பெயரிலான இந்த செயற்கைக்கோள் தயாரிப்பு பணியில், நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதன் அடையாளம் ஆக நாடு முழுவதிலும் இருந்து 750 மாணவிகள் பங்கு கொண்டனர்.

இந்தியாவுக்கு இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் நோக்குடனும் மற்றும் குழந்தைகளிடையே எல்லைகளற்ற உலகு பற்றிய விழிப்புணர்வை பரப்பும் நோக்குடனும், இந்த ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பு செயல்பட்டு வருகிறது.

நாட்டின் சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவின் ஒரு பகுதியாக, பூமியில் இருந்து 1 லட்சத்து 6 ஆயிரம் அடி உயரத்தில் பலூன் ஒன்றின் உதவியுடன் கொண்டு செல்லப்பட்ட தேசிய கொடி பின்னர் பறக்க விடப்பட்டது.

இந்திய சுதந்திர தினத்திற்கு, சர்வதேச விண்வெளி மையத்தில் பணியாற்றும் விண்வெளி வீராங்கனை சமந்தா கிறிஸ்டோபோரெட்டி, இந்திய அமெரிக்கரான ராஜா சாரி உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

இதுபற்றி ராஜா சாரி கூறும்போது, நாசா மற்றும் இஸ்ரோ அமைப்பு நீண்டகால ஒத்துழைப்புடன் செயல்பட்ட வரலாறை கொண்டது. அந்த ஒத்துழைப்பு இன்றளவும் தொடர்கிறது. அதனால், நாங்கள் விண்வெளி மற்றும் புவி அறிவியல் இயக்கங்களில் இணைந்து பணியாற்றி வருகிறோம் என தெரிவித்து உள்ளார்.


Next Story