ரூ.3½ கோடியை சுருட்டிய பெண்கள் உள்பட 4 பேர் கைது


ரூ.3½ கோடியை சுருட்டிய பெண்கள் உள்பட 4 பேர் கைது
x

பெங்களூருவில் மூதாட்டியின் வீட்டை விற்று கிடைத்த ரூ.3½ கோடியை சுருட்டிய பெண்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காசோலைகளில் கையெழுத்து வாங்கி இந்த மோசடியில் ஈடுபட்டது அம்பலமாகி உள்ளது.

பெங்களூரு:-

வீட்டை விற்க சம்மதம்

பெங்களூரு பனசங்கரி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பத்மநாபநகரில் வசித்து வருபவர் சாந்தா (வயது 63). இவரது கணவர் இறந்து விட்டார். இந்த நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு சாந்தாவுக்கு அருந்ததி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அருந்ததி தன்னை எல்.ஐ.சி. ஏஜென்டு என்று கூறிக் கொண்டார். மேலும் சாந்தாவுக்கு காப்பீடு எடுத்து கொடுப்பதாகவும் அருந்ததி கூறினார்.

பின்னர் 2 பேரின் பழக்கம் மேலும் அதிகமானது. சாந்தா வசிக்கும் வீடு பல கோடி ரூபாய் இருக்கும் என்பதால், அந்த வீட்டை அபகரிக்க அருந்ததி, அவரது கூட்டாளிகள் திட்டமிட்டனர். இதற்காக சாந்தா வசிக்கும் வீடு ராசியானது இல்லை என்று, அவர் நம்பும்படி செய்தார்கள். அதன்படி சாந்தாவுடன் லாபகமாக பேசி, அவரது வீட்டை ரூ.4½ கோடிக்கு விற்பனை செய்தனர்.

ரூ.3½ கோடி மோசடி

அந்த பணத்தை சாந்தாவிடம் கொடுக்காமல், அவரது வங்கி கணக்கில் செலுத்தினர். இதையடுத்து அந்த பணத்தை சாந்தாவின் கணவரின் வங்கி கணக்கிற்கு மாற்றி கொடுப்பதாக கூறி, 6 காசோலைகளை வாங்கினர். அதில் சாந்தாவின் கையெழுத்து இருந்தது. அதை வைத்து, வங்கியில் இருந்த ரூ.3½ கோடியை அருந்ததி, அபூர்வா, விசாலா, ராகேஷ் ஆகிய 4 பேர் தங்கள் வங்கி கணக்கிற்கு மாற்றி மோசடி செய்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இது சாந்தாவுக்கு தெரியவந்தது. அவர்கள் இதுகுறித்து பனசங்கரி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அருந்ததி உள்பட 4 பேரை கைது செய்தனர்.


Next Story