விஜயாப்புரா அருகே சாலை தடுப்பில் அமர்ந்து பேசியபோது லாரி மோதி 4 வாலிபர்கள் பலி


விஜயாப்புரா அருகே சாலை தடுப்பில் அமர்ந்து பேசியபோது லாரி மோதி 4 வாலிபர்கள் பலி
x
தினத்தந்தி 18 Oct 2023 6:45 PM GMT (Updated: 18 Oct 2023 6:45 PM GMT)

விஜயாப்புரா அருகே சாலை தடுப்பில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது லாரி மோதி 4 வாலிபர்கள் பலியான சம்பவம் நடந்துள்ளது.

விஜயாப்புரா:

4 வாலிபர்கள் சாவு

கர்நாடக மாநிலம் விஜயாப்புரா(மாவட்டம்) புறநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட வஜ்ரஅனுமான் கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலை 50-ல் ஒரு சுங்கச்சாவடி உள்ளது. அந்த சுங்கச்சாவடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள சாலை தடுப்பில் அமர்ந்து நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் 4 வாலிபர்கள் பேசிக் கொண்டிருந்தனர். மேலும் அவர்கள் தங்களது மோட்டார் சைக்கிள்களை அங்கு நிறுத்தி வைத்திருந்தனர்.

அப்போது அங்கு வந்த ஒரு லாரி திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. மேலும் சாலை தடுப்பில் அமர்ந்திருந்த 4 வாலிபர்கள் மீதும் மோதியது. மோதிய வேகத்தில் 4 வாலிபர்களும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்கள். தகவல் அறிந்ததும் விஜயாப்புரா புறநகர் போலீசார் விரைந்து வந்து 4 வாலிபர்களின் உடல்களையும் மீட்டு விசாரணை நடத்தினார்கள்.

லாரி டிரைவருக்கு வலைவீச்சு

விசாரணையில், அவர்கள் வஜ்ரஅனுமான் கிராமத்தை சேர்ந்த சிவானந்த சவுத்ரி(வயது 25), சுனில் கானாபுரா(26), ஈரண்ணா கோலாரா(26), பிரவீன் பட்டீல்(30) என்று தெரிந்தது.

இவர்கள் 4 பேரும் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிந்துவிட்டு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தடுப்பு வேலியில் அமர்ந்து பேசி கொண்டு இருந்தது தெரியவந்துள்ளது. விபத்து நடந்ததும் லாரியை நிறுத்தாமல் டிரைவர் தப்பி சென்று விட்டார்.

லாரியை டிரைவர் அதிவேகமாக ஓட்டியதே விபத்திற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. லாரி மோதியதில் 2 மோட்டார் சைக்கிள்களும் முற்றிலும் நொறுங்கி சேதம் அடைந்தது. இதுகுறித்து விஜயாப்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாகி விட்ட லாரி டிரைவரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.


Next Story