திரிபுரா சட்டசபையில் ஆபாச படம் பார்த்த விவகாரம் தொடர்பாக கடும் அமளி - 5 எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட்


திரிபுரா சட்டசபையில் ஆபாச படம் பார்த்த விவகாரம் தொடர்பாக கடும் அமளி - 5 எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட்
x
தினத்தந்தி 7 July 2023 11:33 AM GMT (Updated: 7 July 2023 11:35 AM GMT)

பா.ஜ.க. எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.

அகர்தலா,

திரிபுரா மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் நடந்த சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஜடாப் லால் நாத், தனது செல்போனில் ஆபாசப் படம் பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து விளக்கமளித்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஜடாப் லால் நாத், தனது செல்போனில் தொடர்ச்சியாக அழைப்புகள் வந்து கொண்டிருந்ததால் அதை எடுத்துப் பார்த்ததாகவும், அப்போது அதில் ஆபாச படங்கள் ஓடத் தொடங்கியதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே ஜடாப் லால் நாத் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி வற்புறுத்தி வந்தது. ஆனால், யாராவது புகார் கொடுத்தால்தான் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க முடியும் என சபாநாயகர் விஸ்வபந்து சென் கூறினார்.

இந்நிலையில், திரிபுரா சட்டசபையில் பட்ஜெட் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது பா.ஜ.க. எம்.எல்.ஏ. செல்போனில் ஆபாசப் படம் பார்த்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த சபாநாயகர், பல்வேறு முக்கிய பிரச்சனைகள் இருப்பதால் அவர்களது இருக்கையில் சென்று அமரும்படி கூறினார். இதையடுத்து, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அமளியில் ஈடுபட்ட 5 எம்.எல்.ஏ.க்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.


Next Story