5 பேருக்கு தலா 3 ஆண்டு கடுங்காவல் சிறை; சிவமொக்கா கோர்ட்டு தீர்ப்பு


5 பேருக்கு தலா 3 ஆண்டு கடுங்காவல் சிறை; சிவமொக்கா கோர்ட்டு தீர்ப்பு
x

நிலத்தகராறில் தொழிலாளியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற வழக்கில் 5 பேருக்கு தலா 3 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து சிவமொக்கா கோர்ட்டு தீர்ப்பு அளித்து உத்தரவிட்டார்.

சிவமொக்கா;

நிலத்தகராறு

சிவமொக்கா (மாவட்டம்) டவுன் ஹாரனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சையத் மாஜர் (வயது 58). இவரது பக்கத்து வீட்டுக்காரர் ஹதிக் அகமது. இவர்கள் இருவருக்கும் நிலப்பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதேபோல், கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது ஹதிக் அகமது தனது நண்பர்கள் 6 பேருடன் சேர்ந்து சையத்தை தாக்கியதுடன் அவரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சையத், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்த புகாரின்பேரில் சிவமொக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹதிக் அகமது மற்றும் அவரது நண்பர்கள் 6 பேரை கைது செய்தனர்.

3 ஆண்டுகள் தண்டனை

இதுதொடர்பாக அவர்கள் 7 பேர் மீதும் சிவமொக்கா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சிவமொக்கா கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து நீதிபதி முஸ்தபா உசேன் தீர்ப்பு வழங்கினார்.

அப்போது கைதான 7 பேரில் ஹதிக் அகமது உள்பட 5 பேர் மீதான குற்றச்சாட்டு ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டதால், 5 பேருக்கு தலா 3 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். 2 பேர் மீது சரியான ஆதாரங்கள் இல்லாததால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.


Next Story