பாரக் ஒபாமாவால் 6 முஸ்லிம் நாடுகள் மீது வெடிகுண்டுகள் வீசப்பட்டன; நிர்மலா சீதாராமன் தாக்கு


பாரக் ஒபாமாவால் 6 முஸ்லிம் நாடுகள் மீது வெடிகுண்டுகள் வீசப்பட்டன; நிர்மலா சீதாராமன் தாக்கு
x

இந்திய முஸ்லிம்களை பற்றி பாரக் ஒபாமா பேசிய நிலையில், அவரால் 6 முஸ்லிம் நாடுகள் மீது வெடிகுண்டுகள் வீசப்பட்டன என மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார்.

புதுடெல்லி,

பிரதமர் மோடி கடந்த 20-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை 4 நாட்கள் அமெரிக்க பயணம் மேற்கொண்டார். அப்போது, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பாரக் ஒபாமா கூறும்போது, அதிபர் பைடன், பிரதமர் மோடியுடன் பேசினால் இந்தியாவில், வாழ கூடிய சிறுபான்மையினரின் உரிமைகளை பற்றி பேசலாம். அவர்களது உரிமைகள் பாதுகாக்கப்படாவிட்டால் என்னவாகும்? என அவர் கூறியது சர்ச்சை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று கூறும்போது, பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டபோது, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி (பாரக் ஒபாமா) இந்திய முஸ்லிம்களை பற்றி பேசியுள்ளார். நான் எச்சரிக்கையுடனேயே பேசுகிறேன்.

அமெரிக்காவுடன் நல்ல நட்புறவையே நாங்கள் விரும்புகிறோம். ஆனால், இந்தியாவின் மத சகிப்புதன்மையை பற்றி அமெரிக்காவில் இருந்து கருத்துகள் வருகின்றன. அவரால் (ஒபாமா) 6 முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தும் நாடுகளின் மீது வெடிகுண்டுகள் வீசப்பட்டன என அதிரடியாக கூறியுள்ளார்.

வெளிநாடு செல்லும் தலைவர்கள் இந்தியாவுக்கு ஆதரவாக எதுவும் பேசவில்லை என எதிர்க்கட்சிகளையும் அவர் சாடியுள்ளார். அவர்களால் பிரதமர் மோடியை வீழ்த்த முடியவில்லை. அதனால், வேறு வழிகளில் செல்கின்றனர். அவர்களுடைய விவாதங்களில் இதுபோன்ற விசயங்கள் ஒரு பகுதியாக அமைகின்றன என மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

சமீபத்தில் அமெரிக்கா சென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்தியாவில் ஏழைகள் மற்றும் சிறுபான்மை சமூக மக்கள் உதவியற்றவர்களாக உணருகிறார்கள் என பேசினார்.


Next Story