ஓணம் பண்டிகை:கேரளாவில் ரூ.624 கோடிக்கு மது விற்பனை - கடந்த ஆண்டை விட அதிகம்


ஓணம் பண்டிகை:கேரளாவில் ரூ.624 கோடிக்கு மது விற்பனை - கடந்த ஆண்டை விட அதிகம்
x

ஓணம் பண்டிகையையொட்டி கேரளாவில் ரூ.624 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது. இது கடந்த ஆண்டை விட அதிகம் ஆகும்.

கேரளா:

கேரளாவில் பாரம்பரியமாக ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 30-ந் தேதி முதல் தொடர்ந்து 10 நாட்கள் ஓணம் திருவிழா கொண்டாடப்பட்டது. கடந்த 8-ந் தேதி வெகு விமர்சையாக கேரள மக்கள் ஓணம் பண்டிகையை கொண்டாடினர். அதற்கு முந்தைய நாள் 7-ந் தேதி கேரளாவில் மதுபான விற்பனை புதிய உச்சத்தை எட்டி உள்ளது. அன்றைய தினம் ஒரே நாளில் ரூ.117 கோடிக்கு மது விற்பனை நடைபெற்று, புதிய சாதனை நிகழ்த்தப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு ஓணம் பண்டிகைக்கு முந்தைய நாள் ரூ.85 கோடிக்கு மது விற்பனை நடந்தது. கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் ரூ.32 கோடி அதிகமாக விற்பனையாகி உள்ளது.

கேரள மாநில மதுபான கழகமாக பெப்கோ நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும், சில்லறை விற்பனை கடைகளில் ரூ.115 கோடிக்கு வெளிநாட்டு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு ஓணம் பண்டிகையையொட்டி ஒரு வாரத்தில் ரூ.529 கோடிக்கு மது விற்பனையானது. நடப்பாண்டில் ரூ.624 கோடிக்கு மது விற்பனை நடைபெற்று உள்ளது. கடந்த ஆண்டை விட ரூ.95 கோடி அதிகமாக விற்பனையானது. கொல்லம் மாவட்டம் ஆசிரமம் பகுதியில் உள்ள வெப்கோ சில்லறை விற்பனை கடையில் வெளிநாட்டு மதுபானங்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டது. அங்கு ஒரே நாளில் ரூ.1.06 கோடிக்கு மது விற்பனையானது குறிப்பிடத்தக்கது.


Next Story