75-வது குடியரசு தினம்: டெல்லியில் தேசியக் கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு...


75-வது குடியரசு தினம்: டெல்லியில் தேசியக் கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு...
x
தினத்தந்தி 26 Jan 2024 5:13 AM GMT (Updated: 26 Jan 2024 5:16 AM GMT)

குடியரசு தின கொண்டாட்டம் டெல்லியில் உள்ள கடமை பாதையில் நடைபெற்றது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் 75-வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தமிழகத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி தேசியக்கொடி ஏற்றினார்.

இந்த நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள கடமை பாதையில் நடைபெற்ற விழாவில் 21 குண்டுகள் முழங்க ஜனாதிபதி திரவுபதி முர்மு மூவர்ணக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு நடைபெற்றது. அதனை ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

மேலும் டெல்லி கடமை பாதையில் நடைபெற்ற முப்படைகளின் அணிவகுப்பு மற்றும் மாநில அரசுகளின் அலங்கார ஊர்திகளின் ஊர்வலத்தை கண்டு ரசித்தனர். குடியரசு தின விழாவில் பிரான்சு அதிபர் இமானுவேல் மேக்ரான் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார். குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு அழைத்து வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவு சின்னத்தில் பிரதமர் மோடி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் சில நிமிடங்கள் அமைதியாக நின்று நாட்டுக்காக உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். அவருடன் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் முப்படை தளபதிகள் போர் நினைவு சின்னத்தில் மரியாதை செலுத்தினர்.






Next Story