பொது சிவில் சட்டம் குறித்து 80 லட்சம் கருத்துக்கள் பதிவு - சட்ட ஆணையம் தகவல்


பொது சிவில் சட்டம் குறித்து 80 லட்சம் கருத்துக்கள் பதிவு - சட்ட ஆணையம் தகவல்
x
தினத்தந்தி 29 July 2023 11:00 PM GMT (Updated: 29 July 2023 11:16 PM GMT)

சுமார் 80 லட்சம் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளிடம் இருந்து கருத்துக்கள் பெறப்பட்டுள்ளதாக 22-வது சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

திருமணம், விவாகரத்து, ஜீவனாம்சம், தத்தெடுத்தல், வாரிசுரிமை உள்ளிட்ட சிவில் விவகாரங்களில் அனைத்து மதத்தினருக்கும் ஒரே மாதிரியான சட்டத்துக்கு பொது சிவில் சட்டம் வகை செய்கிறது. இச்சட்டத்தை கொண்டு வருவதாக பா.ஜனதா தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.

பொது சிவில் சட்டம் குறித்து பொதுமக்கள், மத அமைப்புகள் கருத்து கூறலாம் என்று இந்திய சட்ட ஆணையம் கடந்த ஜூன் 14-ந்தேதி பொது நோட்டீஸ் வெளியிட்டது. கருத்துக்களை ஆன்லைன் வாயிலாகவோ அல்லது சட்ட ஆணையத்தின் உறுப்பினர் செயலர் முகவரிக்கு தபால் மூலமாகவோ அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

கருத்துகளைத் தெரிவிக்க ஜூலை 28-ந்தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டிருந்தது. காலக்கெடு தற்போது முடிவடைந்துள்ள நிலையில், இதுவரை சுமார் 80 லட்சம் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளிடம் இருந்து கருத்துக்கள் பெறப்பட்டுள்ளதாக 22-வது சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் கருத்துக்களை தெரிவிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story