தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு


தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு
x

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

மைசூரு:-

கே.ஆர்.எஸ். அணை

கர்நாடகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்தது. இதனால் மாநிலத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்தது. இந்தநிலையில் தற்போது நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யவில்லை. இதனால் அணைகளின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. இந்தநிலையில் தமிழகம், கர்நாடகம் உள்பட 4 மாநிலங்களுக்கு காவிரி ஆறு முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி

கிராமம் அருகே காவிரி ஆற்றின் குறுக்கே கிருஷ்ணராஜ சாகர்(கே.ஆர்.எஸ்.) அணை அமைந்துள்ளது.

இந்த அணையின் மொத்த கொள்ளளவு 124.80 அடி ஆகும். அதாவது 49.5 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100கோடி கனஅடி) தண்ணீரை அணையில் சேமித்து வைக்கலாம். கடந்த சில நாட்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்து இருந்தது. இந்தநிலையில் நேற்று 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 3,461 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடி நீர்

அணையில் இருந்து வினாடிக்கு 3,234 கனஅடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டு இருந்தது. அணையின் நீர்மட்டம் 113.46 அடியாக இருந்தது. இதேப்போல் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி கிராமம் அருகே கபிலா ஆற்றின் குறுக்கே கபினி அணை அமைந்துள்ளது. இந்த அணை கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்டதாகும். நேற்று 8 மணி நிலவரப்படி கபினி அணைக்கு வினாடிக்கு 4,549 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 6,000 கனஅடி தண்ணீர் கபிலா ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த 2 அணைகளில் இருந்து திறந்து விடும் தண்ணீர் தமிழகத்்திற்கு செல்கிறது. அதன்படி நேற்று 2 அணைகளில் இருந்து வினாடிக்கு 9,234 கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.


Next Story