2 வயது மூத்த ஆசிரியை மீது ஒரு தலை காதல்... ராஜஸ்தானில் விபரீத முடிவு


2 வயது மூத்த ஆசிரியை மீது ஒரு தலை காதல்... ராஜஸ்தானில் விபரீத முடிவு
x

ராஜஸ்தானில் தன்னை விட 2 வயது மூத்த ஆசிரியை மீது ஒரு தலை காதல் கொண்ட நபரால் விபரீத முடிவு ஏற்பட்டு உள்ளது.

அஜ்மீர்,

ராஜஸ்தானின் அஜ்மீர் பகுதியை சேர்ந்தவர் கீர்த்தி சோனி (வயது 32). தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்துள்ளார். இவரை விவேக் சிங் (வயது 30) என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்து உள்ளார்.

இதனால், அவரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியும் வந்துள்ளார். ஆனால், இதனை ஏற்க மறுத்த சோனி, மனமுடைந்து போயுள்ளார்.

இதுபற்றிய விவரங்களை தனது நண்பரான அனில் என்பவரிடம் சோனி கூறியிருக்கிறார். இதனால், விவேக்கை சந்திக்க அனிலுடன் செல்வது என சோனி முடிவு செய்துள்ளார்.

இதன்படி, உணவு விடுதி ஒன்றிற்கு வரும்படி விவேக்கை, சோனி அழைத்து இருக்கிறார். இதன்பின் அனிலும், சோனியும் ஒன்றாக சென்று உள்ளனர். விவேக் வந்ததும் அவருடன் இருவரும் சந்தித்து பேசி இருக்கின்றனர்.

இந்த சந்திப்பு முடிந்ததும், விவேக் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சோனியை பல முறை குத்தி உள்ளார். இதில், பலத்த காயம் அடைந்த சோனி சரிந்து விட்டார்.

இந்த சம்பவம் நகா மதர் காவல் நிலையத்திற்கு முன்பு நடந்து உள்ளது. அவரை காப்பாற்ற வேறு யாரும் முன்வரவில்லை. இதனை பார்த்த அனில் அதிர்ச்சியில், அந்த இடத்தில் இருந்து அலறி ஓடி விட்டார்.

இதன்பின் படுகாயம் அடைந்து கிடந்த சோனி மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். ஆனால், அவர் உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் கூறி விட்டனர்.

சோனிக்கு திருமணம் நடந்து, அவரது கணவர் காசோலை மோசடி வழக்கு ஒன்றில் சிறையில் உள்ளார். இந்த தாக்குதலில் ஈடுபட்ட விவேக் தப்பியோடி விட்டார். அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.


Next Story