சந்தன மரங்கள் வெட்டி கடத்திய மர்மநபர்களுக்கு வலைவீச்சு


சந்தன மரங்கள் வெட்டி கடத்திய மர்மநபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 4 Oct 2023 6:45 PM GMT (Updated: 4 Oct 2023 6:46 PM GMT)

சிக்கமகளூரு காந்தி பூங்காவில் சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இதில் தொடர்புடைய நபர்களை வனத்துறையினர் வலைவீசி தேடி வருகிறார்கள்.

சிக்கமகளூரு-

சிக்கமகளூரு காந்தி பூங்காவில் சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இதில் தொடர்புடைய நபர்களை வனத்துறையினர் வலைவீசி தேடி வருகிறார்கள்.

சந்தன மரங்கள் கடத்தல்

சிக்கமகளூரு (மாவட்டம்) டவுன் ராமனஹள்ளில் காந்தி பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் சந்தன மரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. இங்கு காலை மாலை என இரு நேரங்களில் பொதுமக்கள் நடைப்பயிற்சி செல்வம் வழக்கம். மேலும் காந்தி பூங்காவுக்கு ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கிறார்கள்.

இந்தநிலையில், நேற்றுமுன்தினம் காலை பொதுமக்கள் நடைப்பயிற்சி சென்றனர். அப்போது பூங்காவில் உள்ள காந்தி சிலை முன்பு சந்தன மரக்கட்டைகள் கிடந்தன. மேலும் பூங்காவில் இருந்த 3 சந்தன மரங்கள் வெட்டப்பட்டு இருந்தன. இதனால் மர்மநபர்கள் சந்தன மரங்களை வெட்டி கடத்தி சென்றதும், ஆட்கள் வந்ததும் சந்தன மரக்கட்டைகளை அங்கே போட்டு விட்டு சென்றதும் தெரியவந்தது.

வனத்துறையினர் விசாரணை

இதுகுறித்து சிக்கமகளூரு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் அப்பகுதியில் நின்றவர்களிடம் விசாரணை நடத்தினர். இதற்கிடையே அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், இரவு சரக்கு வாகனத்தில் மர்மநபர்கள் 4 பேர் வந்தனர்.

பின்னர் அவர்கள் காந்தி பூங்காவுக்குள் ஏறி குதித்து உள்ளே செல்வதும், சந்தன மரங்களை வெட்டியதும், அப்போது அந்த வழியாக பொதுமக்கள் வந்ததால் சந்தன மரக்கட்டைகளை போட்டு விட்டு ஓடுவதும் பதிவாகி இருந்தது. அவர்கள் விட்டு சென்ற சந்தன மரக்கட்டைகள் 20 கிலோ இருக்கும்.

வலைவீச்சு

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் உள்ளூரை சேர்ந்தவரா? அல்லது வெளியூரை சேர்ந்தவரா? என்பது தெரியவில்லை. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறோம் என வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.


Next Story