கேரளாவில் என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் தூக்கில் தொங்கிய மாணவி


கேரளாவில் என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் தூக்கில் தொங்கிய மாணவி
x

கேரளாவில் என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் 2-ம் ஆண்டு மாணவி ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து உள்ளார்.

கோட்டயம்,

கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தில் திருப்புணித்துறா நகரில் திருவாங்குளம் பகுதியை சேர்ந்தவர் ஷ்ரத்தா (வயது 20). இவர் அமல்ஜோதி என்ஜினீயரிங் கல்லூரியில் உணவு தொழில்நுட்ப பிரிவில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

விடுதியில் தங்கியுள்ளார். இந்த நிலையில், கடந்த வெள்ளி கிழமை மாலையில், தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் அவர் காணப்பட்டார். இதனால், சக தோழிகள் அலறினர்.

எனினும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார். ஆசிரியர்களின் மனதளவிலான சித்ரவதையினாலேயே அவர் இந்த முடிவை எடுத்து இருக்கிறார் என மாணவியின் பெற்றோர் குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.

அவரது தோழிகள் கூறிய விசயங்கள் என மாணவியின் தந்தை கூறும்போது, எனது மகளின் மொபைல் போனை பறித்து வைத்து கொண்டனர். துறை தலைவர் மகளை அழைத்து பேசியுள்ளார். துன்புறுத்தியும் உள்ளார். மனதளவில் பாதிக்கப்பட்டு அவரது அறையில் இருந்து எனது மகள் வெளியேறி உள்ளார் என்று கூறியுள்ளார்.

அவரது உறவினர்கள் கூறும்போது, மாணவி தற்கொலைக்கு முயன்றார் என கல்லூரி நிர்வாகம், மருத்துவரிடம் தகவல் கூறியிருந்தால், அதற்கேற்ற சிகிச்சை அளித்து இருப்பார்கள். ஆனால், அவள் மயக்கம் அடைந்து விட்டாள் என கூறியுள்ளனர் என்று குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளனர்.

கல்லூரி ஆய்வகத்தில் அவர் மொபைல் போன் பயன்படுத்தி உள்ளார் என கூறப்படுகிறது. இதனால், அவரிடம் இருந்து மொபைல் போனை கல்லூரி அதிகாரிகள் பறித்து சென்று உள்ளனர். 2 நாட்களாக அதனை திருப்பி தரவில்லை.

பெற்றோரை வந்து வாங்கி கொள்ள கூறியுள்ளனர். அவர்கள் வந்தபோது, பருவதேர்வில் குறைவான மதிப்பெண்களை வாங்கியுள்ளார் என அவர்களிடம்கூறியுள்ளனர். இதனால், ஷ்ரத்தா மனமுடைந்து போயுள்ளார் என கூறப்படுகிறது.

கல்லூரி அதிகாரிகளும், அவரை தற்கொலை செய்ய நெருக்கடி கொடுத்தனர் என அவரது தோழிகள் கூறியுள்ளனர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து மாணவர் அமைப்புகள் பேரணி மற்றும் போராட்டத்திலும் ஈடுபட்டன.

இதன் எதிரொலியாக, கல்லூரி காலவரையின்றி மூடப்பட்டு உள்ளதுடன், விடுதி மாணவிகளையும் வெளியேற்றி உள்ளது. இந்த சம்பவம் பற்றி அறிக்கை அளிக்கும்படி கேரள மந்திரி பிந்து கேட்டு கொண்டு உள்ளார்.


Next Story