முகம் பொலிவாக விரும்பிய மாணவி.. அழகு கிரீமால் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட சோகம்


முகம் பொலிவாக விரும்பிய மாணவி.. அழகு கிரீமால் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட சோகம்
x

கோப்புப்படம்

மும்பையில் அழகு கிரீமால் ஒரு குடும்பமே சிறுநீரக பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.

மும்பை,

வெள்ளையாகிவிடலாம் என்றால் எந்த கிரீமையும் பூசும் மோகம் இளையோர் மத்தியில் தொடர்கிறது. அதன் விளைவுகளை அனுபவிக்கும் போது, ஏன் பூசினோம் என வேதனைக் கொள்வார்கள். இப்போது அதுபோன்ற ஒரு ஆபத்தில் மும்பையை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் சிக்கியுள்ளார்.

தான் அழகாய் தெரிவதற்காக தனது ஒப்பனைக் கலைஞர் கொடுத்த சொந்த தயாரிப்பு ஃபேசியல் கிரீமை தொடர்ந்து பயன்படுத்தியுள்ளார். அவரது முகம் பளபளப்பானதை பார்த்து, பிறர் பாராட்ட பலருக்கும் கிரீமை பரிந்துரை செய்ய தொடங்கியிருக்கிறார். மேலும், மாணவியின் தாயும், தங்கையும் அந்த கிரீமை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

நான்கு மாத காலம் பயன்படுத்தவும் அவர்களது முகம் பளிச்சென மின்னியுள்ளது. ஆனால் அவர்களது சிறுநீரகத்தின் செயல்பாடுதான் மங்க தொடங்கியிருக்கிறது. இதையடுத்து சிறுநீரக பிரச்சினையுடன் அவர்கள் தனியார் மருத்துமனைக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் பயன்படுத்திய பொருட்களை ஆய்வு செய்தபோது, அழகு கிரீமில் பாதரசம் அனுமதிக்கப்பட்ட அளவை விடவும் ஆயிரம் மடங்கு அதிகம் இருந்தது மருத்துவர்களை தூக்கிவாரிப்போட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் ரத்தத்தில் பாதரசம் அளவு 46 ஆக இருந்துள்ளது. இது சாதரணமாக 7-க்கும் குறைவாக இருக்க வேண்டும். கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கல்லூரி மாணவிக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story