தொலைநோக்கு பார்வை, தலைவர், உண்மையான நண்பர்... பிரதமர் மோடிக்கு கிரேக்க பிரதமர் புகழாரம்


தொலைநோக்கு பார்வை, தலைவர், உண்மையான நண்பர்... பிரதமர் மோடிக்கு கிரேக்க பிரதமர் புகழாரம்
x
தினத்தந்தி 21 Feb 2024 9:29 AM GMT (Updated: 21 Feb 2024 9:35 AM GMT)

கிரேக்க நாட்டுக்கு, இளம் இந்தியர்கள் வருகை தந்து, பணியாற்ற ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என அந்நாட்டு பிரதமர் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

கிரேக்க பிரதமர் கிரியகோஸ் மித்சோடாகிஸ் இன்றும் நாளையும் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பிரதமர் மோடி விடுத்த அழைப்பின் பேரில் கிரேக்க பிரதமரின் இந்த பயணம் அமைந்துள்ளது. இதன்படி இந்தியா வந்தடைந்த கிரேக்க பிரதமர் கிரியகோசுக்கு முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.

அவருடன் மூத்த அதிகாரிகள் மற்றும் முக்கிய வர்த்தக குழு ஒன்றும் வந்தடைந்து உள்ளது. புதுடெல்லியில் நடைபெறும் 9-வது ரெய்சினா பேச்சுவார்த்தையில் சிறப்பு விருந்தினராக அவர் கலந்து கொள்கிறார். பிரதமர் மோடி, சார்பில் விருந்தினர்களுக்கு மதிய விருந்து அளிக்கப்பட்டது.

இதன்பின்னர், கிரேக்க பிரதமர் கிரியகோஸ் மற்றும் பிரதமர் மோடி இருவரும் கூட்டாக பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தினர். இதில் கிரேக்க பிரதமர் பேசும்போது, பிரதமர் மோடியிடம் நான், தொலைநோக்கு பார்வை, ஒரு முதன்மையான தலைவர் மற்றும் உண்மையான நண்பர் ஆகிய விசயங்களை கண்டிருக்கிறேன்.

இந்தியாவுடனான நம்முடைய உறவில் நாம் பிணைந்து இருப்பதன் முக்கியத்துவம் நிரூபணம் ஆகியுள்ளது. அது, கடந்த ஆண்டில் நம்முடைய இருதரப்பு தொடர்புகளின் அதிகரிப்பு என்றில்லாமல், நாம் வளர்த்து உள்ள நட்புறவுகளிலும் உள்ளது என்று கூறியுள்ளார்.

பல அம்சங்களில் இந்தியாவும், கிரேக்கமும் ஒன்றுடன் ஒன்று நெருங்கி காணப்படுகிறது. நம்முடைய பகிரப்பட்ட மதிப்புகள், நம்மை நெருங்கி கொண்டு வர செய்யும் பாலம் ஆக பணியாற்றுகிறது.

உலகின் மிக பழமையான ஜனநாயகம்... உலகின் பெரிய ஜனநாயகம்... ஆகியவை, ஒருவருடன் ஒருவர் ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கான பரஸ்பர அரசியல் மனவுறுதியை பகிர்ந்து கொள்கின்றன.

கடந்த ஆண்டு வேளாண்மை மற்றும் பாதுகாப்பு போன்ற முக்கிய துறைகளில், நாம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி கொண்டோம். இந்த ஆண்டில், புலம்பெயர்தல் மற்றும் இயக்கம் சார்ந்த விசயங்களில் முக்கிய ஒப்பந்தம் ஒன்று விரைவில் இறுதி செய்யப்படும்.

இதனால், சட்டவிரோத புலம்பெயர்தல், மனித கடத்தல் போன்ற விவகாரங்களில் நம்முடைய ஒத்துழைப்பை வலுப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையை அது ஏற்படுத்தும்.

அதனுடன் இளம் இந்தியர்கள் கிரேக்க நாட்டுக்கு வருகை தந்து, பணியாற்ற ஒரு சந்தர்ப்பமும் வழங்கும். நம்முடைய பொருளாதார வளர்ச்சியில் இருந்து அவர்கள் பலன் பெறுவதற்கான வாய்ப்பும் கிடைக்க பெறும் என கூறியுள்ளார்.


Next Story