முகவரி, பிறந்த நாளுடன் விநாயகருக்கு ஆதார் அட்டை; பொதுமக்களை கவர்ந்த வித்தியாச பந்தல்


முகவரி, பிறந்த நாளுடன் விநாயகருக்கு ஆதார் அட்டை; பொதுமக்களை கவர்ந்த வித்தியாச பந்தல்
x

ஜார்க்கண்டில் முகவரி, பிறந்த நாளுடன் ஆதார் அட்டை வடிவில் வைக்கப்பட்ட விநாயகரின் பந்தல் ஒன்று காண்போரை கவர்ந்து வருகிறது.



ஜாம்ஷெட்பூர்,



நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி வெகுவிமரிசையாக நேற்று கொண்டாடப்பட்டது. ஆண்டுதோறும் கொண்டாடப்படும் இந்த பண்டிகையின்போது, விநாயகர் சிலைகளை வாங்கி வீட்டில் வைத்து மக்கள் வழிபாடு செய்வது வழக்கம். இதனை தொடர்ந்து சில நாட்களில் சிலையை நீர்நிலைகளில் பாதுகாப்புடன் கரைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், ஜார்க்கண்டில் ஜாம்ஷெட்பூர் நகரில் முகவரி மற்றும் பிறந்த நாளுடன் கூடிய ஆதார் அட்டை வடிவில் வைக்கப்பட்ட விநாயகரின் பந்தல் ஒன்று காண்போரை கவர்ந்து வருகிறது. அந்த அட்டையில், விநாயகர் உருவம் இடம் பெற்று உள்ளது.

அதன் பக்கத்தில், பார்கோடு ஒன்று உள்ளது. அதனை ஸ்கேனிங் செய்தபோது, கூகுள் இணைப்புக்கு செல்கிறது. அந்த இணைப்பில் பல்வேறு வடிவிலான விநாயகரின் புகைப்படங்கள் திரையில் தோன்றுகின்றன.

அந்த பந்தலில், விநாயகரின் முகவரியும் இடம் பெற்று உள்ளது. இதன்படி, தந்தை மகாதேவர் என்றும் கைலாச பர்வதம், மேல் தளம், மானசரோவர் ஏரி அருகே, கைலாசம், அஞ்சல் எண் - 000001 என குறிப்பிடப்பட்டு உள்ளது. அவரது பிறந்த ஆண்டு 6-ம் நூற்றாண்டு, ஜனவரி 1-ந்தேதி என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த விநாயகர் பந்தலை அமைத்த சரவ் குமார் கூறும்போது, ஆதார் அட்டை ஒரு முக்கிய ஆவணம். அதனை வாங்காதவர்கள் அனைவரும் வாங்க வேண்டும் என்ற செய்தியை பகிரும் முயற்சியாக இந்த பந்தலை அமைத்துள்ளேன் என கூறியுள்ளார். விநாயகர் பந்தலால் கவரப்பட்ட பலரும் புகைப்படங்களை எடுத்து கொண்டதுடன், செல்பி புகைப்படமும் எடுத்து கொண்டனர்.


Next Story