டெல்லியில் இளம்பெண்ணை காரோடு இழுத்து சென்ற விவகாரம்: கவர்னர் இல்லம் முன் ஆம் ஆத்மி தொண்டர்கள் போராட்டம்


டெல்லியில் இளம்பெண்ணை காரோடு இழுத்து சென்ற விவகாரம்: கவர்னர் இல்லம் முன் ஆம் ஆத்மி தொண்டர்கள் போராட்டம்
x

டெல்லியில் கார் மோதி இளம்பெண் இழுத்து செல்லப்பட்ட விவகாரத்தில் நீதி வேண்டி கவர்னர் இல்லம் முன் ஆம் ஆத்மி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



புதுடெல்லி,


டெல்லியில் சுல்தான்புரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஸ்கூட்டியில் சென்ற இளம்பெண் மீது கடந்த சில நாட்களுக்கு முன் அதிகாலை 3 மணியளவில் கார் ஒன்று மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது.

இதுபற்றி போலீசாருக்கு அதிகாலை 3.24 மணியளவில் காஞ்ச்வாலா காவல் நிலையத்திற்கு அவசர தொலைபேசி அழைப்பு சென்றுள்ளது. அதன்பின்னர், அதிகாலை 4.11 மணியளவில் இளம்பெண்ணின் உடல் நிர்வாண கோலத்தில் சாலையில் கிடக்கிறது என மற்றொரு அவசர தொலைபேசி அழைப்பு சென்றுள்ளது.

இதனையடுத்து, ரோகிணி மாவட்ட போலீசின் குற்ற பிரிவினர் சம்பவ பகுதிக்கு சென்றனர். அந்த பகுதியை பல்வேறு கோணங்களில் புகைப்படங்களும் எடுத்தனர்.

இதன்பின், உடலை மங்கோல்புரியில் உள்ள எஸ்.ஜி.எம். மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். அந்த இளம்பெண் உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

இந்த சூழலில், இளம்பெண் மீது மோதிய காரில் 5 பேர் சென்றது தெரிய வந்தது. காரையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

காரை ஓட்டி சென்றது யாரென்றும், மதுபோதையில் வாகனம் ஓட்டி சென்றனரா? என்பது பற்றியும் மருத்துவ பரிசோதனை நடந்து வருகிறது என்று போலீசார் கூறினர்.

இந்நிலையில், டெல்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மாலிவால் இந்த சம்பவம் பற்றி தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்டதுடன், டெல்லி போலீசாருக்கு நோட்டீசும் அனுப்பி உள்ளார்.

குடிபோதையில் காரில் சென்றவர்கள் ஸ்கூட்டியில் சென்ற இளம்பெண் மீது மோதி சில கி.மீ. தூரம் இழுத்து சென்றுள்ளனர். டெல்லி காஞ்சவாலா பகுதியில் இளம்பெண்ணின் நிர்வாண நிலையிலான உடல் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இது ஆபத்துக்குரிய விசயம்.

இந்த விவகாரத்தில் முழு உண்மையும் வெளிவர வேண்டும். காரில் குடிபோதையில் 5 பேர் சென்றுள்ளனர். இளம்பெண்ணுக்கு எப்படி நீதி வழங்க போகின்றீர்கள் என டெல்லி போலீசாருக்கு சம்மன் அனுப்பி உள்ளேன் என அவர் கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில் டெல்லி துணை நிலை ஆளுநராக உள்ள வினய் சக்சேனாவின் இல்லத்தின் முன் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த தொண்டர்கள் திரண்டனர். அவர்கள் உயிரிழந்த இளம்பெண்ணுக்கு நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை சமரசப்படுத்தும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். இந்த வழக்கில் குற்றவாளிகள் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story