பிரயாக்ராஜில் மகாமேளா: கங்கையில் ஒரே நாளில் 1½ கோடி பேர் புனித நீராடினர்


பிரயாக்ராஜில் மகாமேளா: கங்கையில் ஒரே நாளில் 1½ கோடி பேர் புனித நீராடினர்
x

மகாமேளாவையொட்டி கங்கையில் ஒரே நாளில் 1½ கோடி பேர் புனித நீராடினர்.

அலகாபாத்தில் மகாமேளா

உத்தரபிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜில் ஆண்டுதோறும் மகாமேளா நடத்தப்படுகிறது. இந்த மகாமேளா காலத்தில் அங்கு புனித நதியான கங்கை நதியிலும், திரிவேணி சங்கமத்திலும் பெருந்திரளானோர் புனித நீராடுவது வழக்கமாக உள்ளது. தற்போது அங்கு மகாமேளா நடந்து வருகிறது.

1½ கோடி பேர் புனித நீராடல்

அந்த வகையில் இந்த மகாமேளா காலத்தில், மவுனி அமாவாசையையொட்டி முன்தினம் நள்ளிரவு 12 மணி முதல் மதியம் 12 மணி வரையில் மட்டுமே கங்கையிலும், திரிவேணி சங்கமத்திலும் 1½ கோடி பேர் புனித நீராடினர்.

இந்த தகவலை பிரயாக்ராஜ் துணை கலெக்டர் விஜய் விஷ்வாஸ் பந்த் தெரிவித்தார்.

5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

இதையொட்டி 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் என சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ் நாராயண் மிஷ்ரா தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது, "நதி ஆம்புலன்ஸ் மற்றும் மிதக்கும் போலீஸ் சாவடி அமைத்துள்ளோம். கூட்டத்தை ரகசிய கண்காணிப்பு கேமராக்களை நிறுவியும், டிரோன் கேமராக்களையும் பயன்படுத்தி வருகிறோம்" என தெரிவித்தனர்.

மவுனி அமாவாசையையொட்டி, பிரபல சாமியார்களும் கங்கையில் புனித நீராடினர். மாநில துணை முதல்-மந்திரி கேசவ் பிரசாத் மவுரியாவும் புனித நீராடினார்.

மகாசிவராத்திரி

அடுத்து 26-ந் தேதி வசந்தபஞ்சமி மற்றும் பிப்ரவரி 5-ந் தேதி மகி பூர்ணிமா விழாக்களின்போதும் மக்கள் பெருந்திரளாகக்கூடி வந்து புனித நீராட உள்ளனர்.

மகாமேளா பிப்ரவரி 18-ந் தேதி மகாசிவராத்திரியன்று நிறைவு அடையும்.


Next Story