அரசு நிலத்தை ஆக்கிரமிப்போர் மீது நடவடிக்கை


அரசு நிலத்தை ஆக்கிரமிப்போர் மீது நடவடிக்கை
x
தினத்தந்தி 16 Sep 2023 6:45 PM GMT (Updated: 16 Sep 2023 6:46 PM GMT)

கோலார் தங்கவயலில் அரசு நிலத்தை ஆக்கிரமிப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் அக்ரம் பாஷா உத்தரவிட்டுள்ளார்.

கோலார் தங்கவயல்

கோலார் நகரசபை

கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் டவுன் வளர்ச்சி வாரியத்தின் கட்டுப்பாட்டில் கோலார் தங்கவயல் தாலுகா மற்றும் பங்காருபேட்டை தாலுகா செயல்பட்டு வருகின்றன.

மேற்கண்ட 2 தாலுகாக்களிலும் வளர்ச்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் நடவடிக்கையில் கோலார் நகரசபை வளர்ச்சி வாரியம் ஈடுபட்டு வருகிறது.

மேற்கண்ட இரு தாலுகாக்களிலும் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வது, லே-அவுட் அமைப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டியது கோலார் தங்கவயல் நகர வளர்ச்சி வாரியமாகும்.

விரைவுச்சாலை அமைக்கும் பணி

இந்த நிலையில் கோலார் தங்கவயல் அருகே பி.இ.எம்.எல். நகரை அடுத்துள்ள டி.கே.ஹள்ளி பவுண்டேஷன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலம் அரசுக்கு சொந்தமானது ஆகும்.

மேலும் பி.இ.எம்.எல். நகர் மார்க்கமாக பெங்களூரு புறநகர் மாவட்டம் தேவனஹள்ளியில் உள்ள பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கோலார் டவுன், பங்காருபேட்டை வழியாக சென்னைக்கு விரைவுச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இதை அறிந்த நில மாபியாக்கள் டி.கே.ஹள்ளி பவுண்டேஷன் பஞ்சாயத்துக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான நிலத்தை ஆக்கிரமித்து அங்கு வீட்டுமனைகள் அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கலெக்டர் உத்தரவு

இது குறித்து மாவட்ட கலெக்டர் அக்ரம் பாஷாவிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் கோலார் தங்கவயல் நகர வளர்ச்சி வாரிய அதிகாரிகளை அழைத்து லே-அவுட் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டதா? என்று கலெக்டர் அக்ரம் பாஷா கேள்வி எழுப்பினார்.

அதற்கு அதிகாரிகள் இல்லை என்று கூறினார்கள். இதனால், ஆவேசம் அடைந்த கலெக்டர் அக்ரம் பாஷா அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


Next Story