நடிகை பலாத்கார வழக்கு: பிரபல நடிகருக்கு ஷாக் கொடுத்த ஐகோர்ட்டு


நடிகை பலாத்கார வழக்கு: பிரபல நடிகருக்கு ஷாக் கொடுத்த ஐகோர்ட்டு
x

நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில், விசாரணையை தள்ளிவைக்கக் கோரிய நடிகர் திலீப்பின் மனுவை கேரள ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.

திருவனந்தபுரம்

பிரபல மலையாள நடிகையை கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கு எர்ணாகுளம் தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நடிகையை பாலியல் துன்புறுத்தல் செய்தபோது, குற்றத்தில் ஈடுபட்ட கும்பல் அதை செல்போனில் பதிவு செய்தது.

பின்னர், இந்த வழக்கில் கைதான பல்சர் சுனில் என்பவரிடமிருந்து, பாலியல் துன்புறுத்தல் காட்சிகள் அடங்கிய மெமரி கார்டை போலீசார் கைப்பற்றி நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். அந்தக் காட்சிகளை நீதிமன்றத்தில் யாரோ ஒருவர் செல்போனில் போட்டு பார்த்ததாகவும், அதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்றும், நடிகை தரப்பில் கேரள ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

திலீப்பின் வழக்கறிஞர்கள், அனைத்து நெறிமுறை மற்றும் சட்ட நெறிமுறைகளுக்கும் எதிராக, சாட்சியங்களை சிதைத்து, சட்டத்திற்குப் புறம்பாக சாட்சிகள் மீது செல்வாக்கு செலுத்துவதன் மூலம் நீதி நிர்வாகத்தில் தலையிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. வழக்கு விசாரணையை நடத்தும் நீதிமன்ற பாதுகாப்பில் மெமரி கார்டு வைக்கப்பட்டிருந்தபோதும், தாக்குதலின் காட்சிகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக நடிகை தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மற்ற வழக்குகளைப் போலல்லாமல், இந்த வழக்கில் மெமரி கார்டுதான் நேரடி ஆதாரம் என்றும், எனவே, நீதிமன்ற பாதுகாப்பில் உள்ள மின்னணு ஆவணங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான வழிகாட்டுதல்களை பரிந்துரைக்க வழக்கறிஞர் ரஞ்சித் மராரை அமிகஸ் கியூரியாக நியமித்து உள்ளது.

இந்நிலையில், இந்த விசாரணையை தள்ளிவைக்கக் கோரி நடிகர் திலீப் சார்பில் கேரள ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. விசாரணைக்கு திலீப் ஏன் அச்சப்பட வேண்டும் எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. நடிகையின் மனு மீதான தீர்ப்பையும் ஒத்திவைத்துள்ளது.


Next Story