காஷ்மீர் அமர்நாத் யாத்திரையில் பங்கேற்ற நடிகை சாரா அலி கானால் பரபரப்பு


காஷ்மீர் அமர்நாத் யாத்திரையில் பங்கேற்ற நடிகை சாரா அலி கானால் பரபரப்பு
x

ஜம்மு- காஷ்மீரில் நடந்து வரும் அமர்நாத் யாத்திரையில் நடிகை சாரா அலி கான் பக்தராக கலந்து கொண்டு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.

ஜம்மு,

பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் சாரா அலி கான். பிரபல பாலிவுட் நடிகரான மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிப்பில் வெளியான கேதார்நாத் படத்தில் நடித்து பாலிவுட்டில் இளம் நடிகையாக அறிமுகமானவர். தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

நடிகர் தனுஷ் நடித்த அத்ரங்கி ரே என்ற படத்திலும் நாயகியாக நடித்து உள்ளார். நடிகர் சைப் அலி கானின் முதல் மனைவியான அம்ரிதா சிங்குக்கு மகளாக பிறந்தவர் சாரா அலி கான். தந்தை முஸ்லீம் மற்றும் தாயார் இந்து என்ற நிலையில், அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி பரபரப்பு ஏற்படுத்துபவர்.

இந்த நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீரில் அமர்நாத் யாத்திரையில் நடிகை சாரா அலி கான் கலந்து கொண்டார். அவர் கையில் தடியை சுமந்தபடி, காவி நிற துண்டு ஒன்றை அணிந்தபடி நடந்து சென்றார்.

சில ஆண்டுகளுக்கு முன், அவர் வாரணாசி நகரில் உள்ள புகழ் பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. உள்ளூர் பண்டிதர்களும், துறவிகளும் இதற்கு கடுமையாக கண்டனம் தெரிவித்தனர்.

அத்ரங்கி ரே படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது, அவர் கோவிலுக்கு சென்றதுடன், கங்கா ஆரத்தி நிகழ்விலும் கலந்து கொண்டார். அப்போது, அவரது தாயார் அம்ரிதா சிங்கும் உடன் இருந்துள்ளார்.

இந்து அல்லாதவர்கள் நுழைவதற்கு தடை என்ற அறிவிப்பு பலகை வைத்துள்ள நிலையில், அவரது வருகைக்கு கோவில் நிர்வாகமும் கண்டனம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில், காஷ்மீரில் நடந்து வரும் அமர்நாத் யாத்திரையில் அவர் இன்று கலந்து கொண்டு உள்ளார். பக்தர்களுடன் பக்தர்களாக நீல வண்ண ஆடையுடன், காவி துண்டு மற்றும் கையில் தடி என பாதுகாவலர்கள் சூழ அவர் நடந்து சென்றார். இதனால், சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story