மல்யுத்த சங்கத்தை நிர்வகிக்க தற்காலிக குழு: இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு மத்திய மந்திரி கடிதம்


மல்யுத்த சங்கத்தை நிர்வகிக்க தற்காலிக குழு: இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு மத்திய மந்திரி கடிதம்
x
தினத்தந்தி 24 Dec 2023 12:06 PM GMT (Updated: 24 Dec 2023 12:23 PM GMT)

மத்திய மந்திரி அனுராக் சிங் தாகூர், இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

புதுடெல்லி,

பாலியல் புகாரில் சிக்கிய பிரிஜ் பூஷண் சரண் சிங், மல்யுத்த சம்மேளன தலைவர் தேர்தலில் போட்டியிடாத நிலையில் அவரது விசுவாசியான சஞ்சய் சிங் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனால் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் அதிர்ச்சிக்குள்ளானார்கள். இதையடுத்து, கடந்த 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் மல்யுத்தத்தில் வெண்கலப்பதக்கம் வென்றவரான சாக்ஷி மாலிக், மல்யுத்த விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிரடியாக அறிவித்தார். மேலும் இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா, பத்மஸ்ரீ விருதை மத்திய அரசிடம் திரும்ப ஒப்படைத்தார்.

இந்த சூழலில், புதிதாக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்ட இந்திய மல்யுத்த சங்கத்தை சஸ்பெண்ட் செய்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. பாலியல் புகாருக்குள்ளான பிரிஜ் பூஷண் ஆதரவாளர்கள் நிர்வாகிகளாக தேர்வானதற்கு வீராங்கனைகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் இந்த நடவடிக்கையை எடுத்தது.

புதிதாக தேர்வான மல்யுத்த கூட்டமைப்பு நிர்வாகம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய மந்திரி அனுராக் சிங் தாகூர், இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், புதிதாக தேர்வான நிர்வாகத்தில், முந்தைய நிர்வாகத்தினரின் தலையீடு உள்ளது என்றும், இந்திய மல்யுத்த சங்கத்தில் தொடர்ச்சியாக நடந்துவரும் சர்ச்சைகளுக்கு முடிவு காண வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்திய மல்யுத்த சங்கத்தை நிர்வகிக்க, தற்காலிக நிர்வாக குழுவை அமைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Next Story