அதானி விவகாரம்: அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து நாளை 18 எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்


அதானி விவகாரம்: அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து நாளை 18 எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்
x

அதானி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து நாளை 18 எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நேற்று தொடங்கியது. அவை தொடங்கியவுடன் இந்திய ஜனநாயகம் தொடர்பாக லண்டனில் ராகுல் காந்தி பேசிய உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் நேற்று பா.ஜனதா, காங்கிரஸ் உறுப்பினர்கள் மோதலில் ஈடுபட்டதால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

இந்தநிலையியில், இன்றும் அதானி, ராகுல் விவகாரங்களை இரு அவைகளிலும் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சிகளும் எழுப்பியதால் காலை முதலே கூச்சலும் குழப்பமும் நீடித்தது. காலை 11 மணிக்கு அவை தொடங்கியவுடன் மக்களவையும், 12 மணிக்கு மாநிலங்களவையும் எம்.பி.க்களின் அமளியால் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து, உணவு இடைவெளிக்கு பிறகு அவைகள் கூடியவுடம் மீண்டும் அமளி தொடர்ந்தது, ராகுல்காந்தியின் லண்டன் பேச்சு, அதானி விவகாரம் உள்ளிட்டவைகளால் ஆளும்கட்சி, எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவையில் கூச்சல், குழுப்பம் நிலவியது.

இந்த நிலையில், அதானி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து நாளை 18 எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நாளை காலை 10 மணிக்கு 18 எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளனர். எதிர்க்கட்சிகளை குறி வைக்கும் அமலாக்கப்பிரிவு அலுவலகம் நோக்கி ஊர்வலம் நடத்துவது குறித்தும் விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


Next Story