நாடாளுமன்றத்தில் பயன்படுத்த கூடாத வார்த்தைகள் பட்டியலை திரும்ப பெற கோரி சபாநாயகருக்கு காங்கிரஸ் எம்.பி கடிதம்


நாடாளுமன்றத்தில் பயன்படுத்த கூடாத வார்த்தைகள் பட்டியலை  திரும்ப பெற கோரி சபாநாயகருக்கு காங்கிரஸ் எம்.பி கடிதம்
x

நாடாளுமன்றத்தில் பயன்படுத்த கூடாத வார்த்தைகளின் பட்டியலை திரும்ப பெற கோரி லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம் எழுதி உள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 18-ந்தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில், நாடாளுமன்றத்தில் பயன்படுத்த கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகம் ஒன்று மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது என்ற தகவல் வெளியானது.

அந்த புத்தகத்தில், வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், ஊழல், ஒட்டுகேட்பு ஊழல், கொரோனா பரப்புபவர், வாய்ஜாலம் காட்டுபவர், நாடகம், கபட நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், சர்வாதிகாரி, அழிவு சக்தி, காலிஸ்தானி ஆகிய வார்த்தைகள் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளாக சேர்க்கப்பட்டுள்ளது.

மேலும், இரட்டை வேடம், பயனற்றது, நாடகம், ரத்தக்களரி, குரூரமானவர், ஏமாற்றினார், குழந்தைத்தனம், கோழை, கிரிமினல், முதலை கண்ணீர், அவமானம், கழுதை, கண்துடைப்பு, ரவுடித்தனம், போலித்தனம், தவறாக வழிநடத்துதல், பொய், உண்மையல்ல ஆகிய வார்த்தைகளும் இனிமேல் தடை செய்யப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் பயன்படுத்த கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை திரும்ப பெற வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

அதில், " நாடாளுமன்றத்தின் தீவிரமான விஷயத்தை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். நாடாளுமன்றத்தில் பயன்படுத்த கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகம் ஒன்றை லோக்சபா செயலகம் வெளியிட்டுள்ளது. அதில் அவமானம், துஷ்பிரயோகம், துரோகம், ஊழல், நாடகம், கபடம், திறமையற்றது போன்ற வார்த்தைகள் உள்ளன. நாம் அன்றாடம் பேசுவதற்கு பயன்படுத்தப்படும் பொதுவாக வார்த்தைகள் இந்த புதிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

பொதுவான அகராதியில் இருந்து இந்த வார்த்தைகளை எடுத்துவிட்டால், நாங்கள் வெளிப்படுத்த விரும்பும் சாரம்சமும் தாக்கமும் குறைந்து விடும். மேலும், அனைத்து கட்சி உறுப்பினர்கள் அடங்கிய விதி குழுவில் இது போன்ற முக்கிய விவகாரங்கள விவாதிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த முக்கிய விவகாரத்தில் எந்த அரசியல் கட்சிகளிடமும் கருத்து கேட்கப்படவில்லை. " இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நாடாளுமன்றத்திற்கு புறம்பான இந்த பட்டியலை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் அனைத்து அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசித்து இறுதி பட்டியலை தயாரிக்க வேண்டும் என சபாநாயகரிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story