23 வருடங்களில் யாரும் இப்படி பேசியது இல்லை..வாக்குவாதம் செய்த வக்கீலை எச்சரித்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி


23 வருடங்களில் யாரும் இப்படி பேசியது இல்லை..வாக்குவாதம் செய்த வக்கீலை எச்சரித்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி
x
தினத்தந்தி 3 Jan 2024 12:36 PM GMT (Updated: 3 Jan 2024 12:37 PM GMT)

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கறிஞர் ஒருவர் நடந்து கொண்ட விதம் தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட்டை கோபத்திற்கு உள்ளாக்கியது. இதனால், சம்பந்தப்பட்ட வழக்கறிஞரை நீதிபதி எச்சரித்தார்.

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டில் இன்று மனுவை விசாரிப்பது தொடர்பாக வழக்கறிஞர் ஒருவர் வாக்கு வாதம் செய்தது தலைமை நீதிபதியை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியது. இதனால், அந்த வழக்கறிஞரை கடுமையாக எச்சரித்த நீதிபதி சந்திரசூட், எனது 23 ஆண்டு கால பணிக்காலத்தில் யாரும் இப்படி நடந்தது இல்லை என்று கடும் கண்டனம் தெரிவித்தார். இது குறித்த விவரம் வருமாறு:

சுப்ரீம் கோர்ட்டில் இன்று வழக்கமான அலுவல்கள் நடைபெற்று வந்தது. அப்போது, மனு ஒன்றை விசாரிப்பது தொடர்பாக வக்கீல் ஒருவர் தனது குரலை உயர்த்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அதிருப்தி அடைந்த தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், ஒரு நொடி பொறுமையாக இருங்கள். நீங்கள் நாட்டின் முதன்மையான நீதிமன்றமான உச்ச நீதிமன்றத்தில் வாக்குவாதம் செய்கிறீர்கள். உங்கள் சத்தத்தை குறைக்கவும் இல்லையென்றால் உங்களை வெளியேற்ற வேண்டியிருக்கும். நீங்கள் வழக்கமாக எங்கு ஆஜராவீர்கள்? ஒவ்வொரு முறையும் நீதிபதியிடம் இப்படித்தான் முறையீடுவீர்களா?

கோர்ட்டில் கண்ணியத்தை கடைபிடிப்பது அவசியம். உங்கள் குரலை உயர்த்தி பேசி எங்களை அதட்டி பார்க்கலாம் என நினைக்கிறீர்களா? அப்படியென்றால் நீங்கள் தவறாக நினைக்கிறீர்கள். 23 ஆண்டுகளில் இப்படி ஒருபோதும் நடைபெற்றது இல்லை. எனது பணிக்காலத்தில் கடைசி ஆண்டில் இப்படி நடக்கக் கூடாது" என்று அதிருப்தியுடன் பேசினார். இதனால், அதிர்ச்சி அடைந்த வழக்கறிஞர் தலைமை நீதிபதியிடம் மன்னிப்பு கேட்டார்.


Next Story