அக்னிபத் திட்டம்: விமானப்படையில் சேர 7.49 லட்சம் பேர் விண்ணப்பம்


அக்னிபத் திட்டம்: விமானப்படையில் சேர 7.49 லட்சம் பேர் விண்ணப்பம்
x

கோப்புப்படம்

அக்னிபத் திட்டத்தின் கீழ் விமானப்படையில் சேர 7.49 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

ராணுவத்துக்கு ஆள்சேர்க்க 'அக்னிபத்' என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த புதிய பணி நியமன முறையை 'டூர் ஆப் தி டூட்டி' என்று அழைக்கிறார்கள்.

இந்த திட்டத்தின் கீழ் நியமிக்கப்படும் வீரர்கள் அக்னிவீரர்கள் என அழைக்கப்படுவார்கள். 4 ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் அக்னிவீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். 4 ஆண்டு முடிவில் அவர்களுக்கு ரூ.10 லட்சம் (வரிப்பிடித்தம் இல்லாமல்) வழங்கப்படும். அத்துடன் சான்றிதழும் வழங்கப்படும்.

இந்த திட்டத்தின் கீழ் 45 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வீரர்களை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ராணுவத்தில் அதிகாரி பதவிக்கு கீழ் உள்ளவர்கள் இந்த பணியில் நியமிக்கப்படுகிறார்கள்.

இந்த திட்டத்துக்கு இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்ற போதும் அக்னிவீரர்களை தேர்வு செய்யும் பணியை தீவிரப்படுத்தியது.

இந்நிலையில், அக்னிபத் திட்டத்தின்கீழ் விமானப்படையில் சேர 7,49,899 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்ற இந்திய விமானப்படை அறிவித்துள்ளது. இதுவரை விமானப் படை பணி நியமனத்திற்கு பெறப்பட்ட விண்ணப்பங்களில் இதுவே அதிகம் என்று கூறப்படுகிறது.

கடந்த ஜூன் 24ஆம் தேதி தொடங்கிய விண்ணப்ப பதிவு நேற்றுடன் (ஜூலை 5 ஆம் தேதி) முடிவடைந்த நிலையில் இந்திய விமானப்படை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.





Next Story