வட மாநிலங்களில் வெப்ப அலை: உருகிய தண்டவாளம்; பெரும் விபத்து தவிர்ப்பு


வட மாநிலங்களில்  வெப்ப அலை: உருகிய தண்டவாளம்; பெரும் விபத்து தவிர்ப்பு
x
தினத்தந்தி 18 Jun 2023 4:17 PM GMT (Updated: 18 Jun 2023 4:25 PM GMT)

உத்தரபிரதேசத்தில் வெப்ப அலையால் ரெயில் தண்டவாளம் வளைந்து நெலிந்து போனது. இதனை கண்ட ரெயில் ஓட்டுனர் சாமர்த்தியமாக ரெயிலை நிறுத்தி பெரும் விபத்தை தவிர்தார்.

லக்னோ,

இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, மராட்டியம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் மழை தொடங்கினாலும் வட இந்தியாவின் சில மாநிலங்களில் இன்னும் வெப்ப அலை வீசி வருகிறது. குறிப்பாக உத்தரபிரதேசம், பீகார், டெல்லி, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் வெப்பக்காற்று வீசுகிறது. இதன் காரணமாக நண்பகல் நேரங்களில் மக்கள் வீடுகளில் தஞ்சமடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 15, 16, 17 தேதிகளில் உத்தரபிரதேசம், பீகார், ஒடிசாவில் கடுமையான வெப்பம் நிலவியது. அந்த நாட்களில் உத்தரபிரதேச மாநிலம், பாலியா மாவட்டத்தில் மட்டும் 400 பேர் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 54 பேர் உயிரிழந்தனர். பலரும் காய்ச்சல், மூச்சுத்திணறல், வயிற்றுப்போக்கு போன்ற வெப்பம் சார்ந்த உடல் உபாதைகள் காரணமாக அனுமதிக்கப்பட்டனர். அனுமதிக்கப்பட்டவர்களில் 60 வயதுக்கும் மேற்பட்டவர் அதிகம். வட இந்தியாவில் வெயில் வாட்டி வதைக்கும் சூழலில் பீகார், உத்தரபிரதேசம், ஒடிசாவில் வெப்ப அலைகளால் கடந்த சில நாட்களில் 117 பேர் உயிரிழந்தனர்.

இந்தநிலையில், நேற்று உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் -பிரதாப்கர் வழித்தடத்தில் உள்ள நிகோஹான் ரெயில் நிலையத்தை நீலாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மாலை நெருங்கியது. இந்த வேளையில் வழக்கமாக செல்லும் தண்டவாளத்தில் ஒரு ரெயில் நின்றது. இதனால் நீலாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயில் லூப்லைன் தண்டவாளத்தில் மாற்றி விடப்பட்டது.

இதனால் அந்த ரெயில் லூப்லைனில் செல்ல வேண்டி இருந்தது. அப்போது தண்டவாளத்தில் ரெயில் செல்லும்போது வரும் அதிர்வில் மாற்றம் உருவானது. இதனால் சந்தேகத்தில் பைலட் ரெயிலை இயக்காமல் நிறுத்தினார். இதையடுத்து உடனடியாக அவர் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். என்ஜினீயரிங் பிரிவு ஊழியர்கள், அதிகாரிகள் விரைந்து வந்தனர்.

அப்போது தண்டவாளங்கள் சீர்க்குலைந்து இருப்பது தெரியவந்தது. அதாவது கடும் வெப்பத்தின் காரணமாக தண்டவாளங்கள் உருகி வளைந்து நெளிந்து இருந்தது. இதையடுத்து ஊழியர்கள் தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதன்பிறகு இந்த ரெயில் மாற்று தண்டவாளத்தில் இயக்கப்பட்டது. அதோடு லூப்லைனில் பிற ரெயில்கள் இயங்காமல் உடனடியாக தடை செய்யப்பட்டது. பைலட்டின் சாமர்த்தியத்தால் பெரும் ரெயில் விபத்து தடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பைலட்டுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே பராமரிப்பு பணியை சரியாக மேற்கொள்ளாமல் இருந்தது தான் தண்டவாள சீர்குலைவுக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி லக்னோ கோட்ட ரெயில்வே மேலாளர் (டிஆர்எம்) சுரேஷ் சப்ரா உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து இவ்வழியாக செல்லும் பிற ரெயில்கள் லூப் லைனில் செல்லாமல் இருக்கமாறு ஸ்டேஷன் மாஸ்டருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் மேற்கு வங்க மாநிலம் ஷாலிமாரில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே சரக்கு ரெயில் மீது தடம் புரண்டது. அதன்பிறகு அந்த ரெயில் பெட்டி மீது மோதி பெங்களூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது. இந்த கோர விபத்தில் 290 பேர் வரை பலியான நிலையில் 750க்கும் அதிகமானவர்கள் காயமடைந்த சோக சம்பவம் நடந்த நிலையில் லக்னோ அருகே ரெயில் பைலட்டின் சாமர்த்தியத்தால் நேற்று பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story